சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் சண்முகநாதன் காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த சண்முகநாதன், சிறு வயது முதலே எழுத்தாளராக, செய்தியாளராக பணியாற்ற வேண்டும் என்ற கனவைக் கொண்டு இருந்தார்.
பள்ளிப் பருவத்திலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய அவர், ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெண்ணிலா என்ற பல்சுவை இதழை வெளியிட்டார்.
கடந்த 1953ஆம் ஆண்டு தினத்தந்தி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த சண்முகநாதன் சுமார் 70 ஆண்டுகள் அப்பத்திரிகையில் பணியாற்றினார். செய்தி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய அவர், சமகால வரலாற்றை தொகுத்து அளிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவர்கள்’ என்ற அவரது நூல் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. ‘ஒரு தமிழன் பார்வையில் 20ஆம் நூற்றாண்டு’, ‘கற்காலம் முதல் கம்ப்யூட்டர் வரை’ என்பன உள்ளிட்ட மேலும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சண்முகநாதன்.
கடந்த 2022ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதை இவருக்கு அளித்து சிறப்பு செய்தது தமிழக அரசு. சண்முகநாதன் தனது 93வது வயதில் வயது மூப்பு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.