கவலைக்குரிய உலகச் சூழலில் ஆசியான் ஐக்கியம் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் ஆசியான் நாடுகள் ஒன்றுடன் ஒன்று நன்கு ஒத்துழைத்ததைச் சுட்டிய திரு லீ, கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து உலகம் மீண்டு வந்தாலும், உலகச் சூழ்நிலை சிக்கல் நிறைந்ததாக ஆகிவரும் நிலையில், ஆசியான் தொடர்ந்து வட்டார ஒன்றிணைப்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தோனீசியாவின் லாபுவான் பாஜோ நகரில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் நடைபெறும் 42வது ஆசியான் இருநாள் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ உரையாற்றினார்.
பொருளியல் ஒருங்கிணைப்பே எப்போதும் ஆசியானின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற அவர், ஆசியான் தனது பொருளியல் ஒருங்கிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.
இந்தோனீசியா உருவாக்கும் ஆசியான் மின்னிலக்க பொருளியல் கட்டமைப்பு உடன்பாட்டுக்கு சிங்கப்பூர் வலுவான ஆதரவை அளிக்கிறது. மக்களின் மின்னிலக்க இணைப்புகளையும் எழுத்தறிவையும் மேம்படுத்துவதால் ஏராளமான பொருளியல் நன்மைகளைப் பெறலாம் என்றார் திரு லீ.
பசுமைப் பொருளியல் பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தோனீசியாவின் தலைமைத்துவத்தில் எரிசக்தி இணைப்புகளை வலுப்படுத்தப்படுவதை சிங்கப்பூர் ஆதரிக்கிறது என்றார்.
பலதரப்பு எரிசக்தி பரிவர்த்தனை வட்டாரத்தில் சாத்தியம் என்பதற்கு லாவோ பிடிஆர்-தாய்லாந்து-மலேசியா-சிங்கப்பூர் எரிசக்தி ஒருங்கிணைப்புத் திட்டத்தை அவர் உதாரணமாகச் சுட்டினார்.
“ஆசியான் உறுப்பினர்களின் எரிசக்தி பாதுகாப்பையும் மீள்திறனை வலுவாக்கவும் வட்டார கரிம வெளியீட்டை குறைக்கும் முயற்சிகளின் முன்னேற்றத்துக்கும், ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பை உருவாக்கவேண்டும்,” என்றார் பிரதமர் லீ.
ஆசியான்-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து தாராள வர்த்தகப் பகுதி, ஆசியான்-சீனா தாராள வர்த்தகப் பகுதி ஆகியவை குறித்த முயற்சிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இரண்டாவது மேம்பாட்டு அம்சங்களில் மின்னிலக்கம், பசுமைப் பொருளியல்கள், விநியோகச் சங்கிலி இணைப்பு போன்ற புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
பொருளியலுக்கு அப்பால், ஆசியான் நாடுகடந்த பிரச்சினைகளிலும் இணையப்பாதுகாப்பிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். பெருகி வரும் அதிநவீன எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களிலிருந்து வட்டார மக்களைப் பாதுகாப்பதும் அதில் அடங்கும் என்று பிரதமர் லீ கூறினார்.
மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக ஆள் கடத்தல் உள்ளது. ஆள் கடத்தல் எதிர்ப்புக்கான இந்தோனீசியாவின் முயற்சியை சிங்கப்பூர் ஆதரிக்கிறது என்றார் திரு லீ.
ஆசியானில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு வலுவான அரசியல் ஆதரவு தேவை என்ற பிரதமர் லீ, தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், ஆசியானின் எதிர்காலத்திற்கான ஒன்றுபட்ட இலக்கை ஏற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
மாநாட்டின் முக்கிய அம்சமாக திமோர் லெஸ்டே ஆசியானின் 11ஆம் உறுப்பினராக சேர்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. அத்திட்டத்தில் திமோர் லெஸ்டே நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் கடப்பாடுகளும் இடம்பெறுகின்றன.
திமோர் லெஸ்டே பிரதமர் தவூர் மாத்தான் ருவாக், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின், லாவோஸ் பிரதமர் சொனேக்சே சைஃபான்டோனே ஆகியோருடன் பிரதமர் லீ சந்திப்புகளை நடத்தினார்.
ஆசியான் வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட ஆசியான் பங்களிக்கவேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தமது தொடக்க உரையில் கேட்டுக்கொண்டார். இவ்வாண்டு ஆசியானின் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் இந்தோனீசியா, அமைதியான முறையில் மியன்மாரின் ராணுவம், அரசாங்கம், ஆயுதமேந்திய இனக் குழுக்கள் ஆகியோருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.