இனி 'பிசிஆர்' சான்றிதழ் வேண்டாம்: இந்தியா செல்வோர் நிம்மதிப் பெருமூச்சு

இனி 'பிசிஆர்' சான்றிதழ் வேண்டாம்: இந்தியா செல்வோர் நிம்மதிப் பெருமூச்சு

1 mins read
8a2c27fb-3b69-49e0-83d0-915a12ae00b5
சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து அல்லது அவற்றின் வழியாக வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தவிருக்கிறது. கோப்புப்படம்: பிடிஐ -

புதுடெல்லி: சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து அல்லது அந்நாடுகள் வழியாக இந்தியா செல்லும் பயணிகள், இனி 'கொவிட்-19 தொற்று இல்லை' என்பதற்கான 'பிசிஆர்' பரிசோதனைச் சான்றிதழை வழங்க தேவையில்லை.

அதேபோல, 'ஏர் சுவிதா' இணையப்பக்கத்திற்குச் சென்று, அவர்கள் தங்களது உடல்நலம் குறித்து உறுதிமொழி அளிக்கவும் தேவை இல்லை.

இந்த நடைமுறை வரும் 13ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து நடப்பிற்கு வரவிருக்கிறது.

அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 விழுக்காட்டினரை விமான நிலையத்திலேயே கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பு பயணத்துறைக்குப் பெரும் நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது. ஏனெனில், கொவிட்-19 பரிசோதனைச் சான்றிதழ் கட்டாயம் தேவை என்ற விதிமுறை, அந்த ஆறு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்குச் சுற்றுலா செல்வோர் அதிகம் என்பதுடன், அந்நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புலம்பெயர் இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.

கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இந்தியர்கள் தன் நாட்டிற்குச் சுற்றுலா வருவது அதிகரித்துள்ளதால் தாய்லாந்திற்கும் இந்த அறிவிப்பு அதிக மகிழ்ச்சி அளிக்கும்.