நீரிழிவை குணப்படுத்த வழங்கப்படும் மூன்று விதமான மருந்துகளில் பாதுகாப்பற்ற அளவுக்கு புற்றுநோயை உண்டாக்கும் வேதியியல் மாசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் 46 மெட்ஃபார்மின் மருந்துகளை சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ஆய்வு செய்துள்ளது. மற்ற 43 மருந்துகளை விற்கத் தடையில்லை.
உலக அளவில் பயன்படுத்தப்படும் நீரிழிவு மருந்துகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் மாசு பாதுகாப்பற்ற அளவுக்கு இருக்கின்றனவா என்று உலகளாவிய சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் இந்த மருந்துகள் மீட்டுக்கொள்ளப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதய, வயிற்றுப் பிரச்சினைகளுக்கான மருந்துகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் இந்த வேதியியல் மாசு இருந்தது முன்பு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
N-nitrosodimethylamine (NDMA) என்று அழைக்கப்படும் நைட்ரசமைன் வேதியியல் மாசு மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளில் இருப்பதாகவும் அவை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக NDMA வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீரிழிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயர் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளை மீட்டுக்கொள்வதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
குளோரியஸ் டெக்சா சிங்கப்பூர் நிறுவனம் விநியோகித்த Glucient XR Tablet 500mg மருந்தின் ஒரு பகுதி, ஃபார்மேஷன் மெடிக்கல் நிறுவனம் விநியோகித்த Meijumet Prolonged Release Tablet in 750mg, and 1000mg வகை மருந்துகள் ஆகியவை மீட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மீட்டுக்கொள்ளப்படும் மருந்துகளை உட்கொண்ட நோயாளிகளுக்கு அதனால் ஏற்படும் தகாத விளைவுகள் மிகக் குறைவு என்று ஆணையம் தெரிவித்தது.
நைட்ரசமைன் வேதியியல் மாசுப் பொருள்களை நீண்ட காலத்துக்கு உட்கொள்பவர்களுக்கே மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் சிங்கப்பூரில் அந்த மருந்துகள் கடந்த ஆண்டிலிருந்துதான் விநியோகிக்கப்படுகின்றன என்றும் ஆணையம் தெரிவித்தது.
மெட்ஃபார்மின் மருந்துகளைத் தற்போது உட்கொள்ளும் நோயாளிகள் தாங்களாகவே சிகிச்சையை நிறுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஆணையம் தெரிவித்தது.
மீட்டுக்கொள்ளப்படும் மருந்துகளைத் தங்களது நோயாளிகளுக்குப் பரிந்துரைத்த சுகாதார நிபுணர்கள் மாற்று மருந்துகளை ஆக விரைவில் ஏற்பாடு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.
மீட்டுக்கொள்ளப்பட்ட மருந்துகளில் உள்ள NDMA வேதியியல் மாசு விலங்குகளிலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என புளூம்பெர்க் குறிப்பிட்டது.
ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட காய்கள், உப்பிடப்பட்ட மீன், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாசுக் காற்று போன்றவற்றில் NDMA வேதியியல் மாசு காணப்படும்.
மருந்துகளின் உற்பத்தியில் நைட்ரசமைன் வேதியியல் மாசுகள் எதிர்பாராத விதமாக உருவாவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாசு பாதுகாப்பான அளவைவிட அதிகமாக உள்ள மருந்துகள் உலகம் முழுவதும் மீட்டுக்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
பிரச்சினையைத் தீர்க்க, தற்போது மீட்டுக்கொள்ளப்படும் மருந்துகளை விநியோகித்த நிறுவனங்களுடன் சுகாதார அறிவியல் ஆணையம் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்பட்டது.
இந்த மருந்துகள் தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்தை அணுக 68663538 என்ற கைபேசி எண் அல்லது contact_hprg@hsa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity