கொவிட்-19 தொற்றுநோயினால் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலக அளவில் மில்லியன் கணக்கான உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக குறைந்து வந்த குழந்தை இறப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டது.
கடந்த 30 ஆண்டு காலமாக, குறைமாத குழந்தைப் பேறு, நிமோனியா உட்பட குழந்தை இறப்புக்குக் காரணமான பிரச்சினைகளைக் களைவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வந்துள்ளது.
ஐநாவின் சிறார்கள் நிதியமான யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, உலக வங்கிக் குழுமம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட புதிய இறப்பு விகித கணிப்பின்படி, உலக அளவில் ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 2019 ஆம் ஆண்டில் மிகக் குறைவாக உள்ளது.
1990ஆம் ஆண்டின் 12.5 மில்லியன் இறப்புகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5.2 மில்லியன் குழந்தைகள் தடுக்கக்கூடிய நோய் காரணமாக இறந்தனர்.
ஆனால், வழக்கமான தாய், சேய் சுகாதார சேவைகளைக் குறைப்பதன் மூலம் தொற்றுநோய் பரவல் இந்த முன்னேற்றத்தை இல்லாமல் செய்துவிடும் அச்சுறுத்தல் இருப்பதாக அது எச்சரித்தது.
குழந்தை உடல்நலப் பரிசோதனைகள், நோய்த்தடுப்பு மருந்து கொடுப்பது போன்றவற்றில் சில இடையூறுகள் இருப்பதாக 77 நாடுகளில் நடந்த யுனிசெஃப் கணக்கெடுப்பில் 68 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
கொவிட்-19 சம்பவங்கள் தேசிய உள்கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுகாதாரப் பராமரிப்பு தடைப்பட்டுள்ளது என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் கூறினார்.
“தடைப்பட்டுள்ள சுகாதார கட்டமைப்புகளையும் சேவைகளையும் மீண்டும் தொடங்க அவசர முதலீடுகள் கிடைக்காதுபோனால், ஐந்து வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான குழந்தைகள், குறிப்பாக புதிதாகப் பிறந்தவர்கள் இறக்கக்கூடும்,” என்றார் அவர்.
வளரும் நாடுகளில் பிறந்த குழந்தைக்கான தீவிர பராமரிப்பு ஒப்பீட்டளவில் மலிவாக உள்ளது. இது குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எடுத்துக்காட்டாக, தொழில்முறை மருத்துவச்சிகள் மூலம் கவனிப்பைப் பெறும் பெண்கள் தங்கள் குழந்தையை இழப்பது 16% குறைவாகவும், குறைமாதத்தில் குழந்தை பிறப்பது 24% குறைவாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய மாதிரி ஆய்வில், கொவிட்-19 கிருமிப் பரவலால் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள இடையூறு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் கூடுதலாக கிட்டத்தட்ட 6,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று தெரியவந்தது.
ஏழு நாடுகளில் கடந்த ஆண்டு உயிருடன் பிறந்த 1,000 குழந்தைகளில் 50க்கும் மேற்பட்டவை இறந்துள்ளன என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பெரும்பாலான தடைகள் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், சுகாதார பராமரிப்பு வசதிகளைப் புறக்கணிப்பதால் தாய்மார்களும் குழந்தைகளும் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று அது குறிப்பிட்டது.