சிங்கப்பூரில் 100 வயது மற்றும் அதற்கும் மேல் வயதுடையவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 700 பேர் இருந்தனர். அந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் 1,500ஆக உள்ளது.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அத்தகையோரில் அடங்குவர் என்று புள்ளிவிவரத்துறை பேச்சாளர் தெரிவித்தார். அதுபோக, 80 மற்றும் 90களில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, 80க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்ட 103,100 சிங்கப்பூர்வாசிகள் இருந்ததாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட ‘மக்கள்தொகை போக்கு 2020’ அறிக்கை தெரிவித்தது.
2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வயதுப் பிரிவில் இருந்த 58,300 பேரைவிட இது 77 விழுக்காடு அதிகம்.
இவ்வாண்டு ஜூன் மாதம் 90 வயது மற்றும் அதற்கும் மேல் வயதுடைய 20,900 சிங்கப்பூர்வாசிகள் இருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வயதுப் பிரிவில் 10,800 பேர் இருந்தனர்.
மூப்படைவது குறித்த விவகாரங்களை ஆராயும் நிபுணர்கள், சிங்கப்பூரர்கள் நீண்டகாலம் வாழ்வதற்கு மருத்துவ அறிவியல் மற்றும் பொதுச் சுகாதாரச் சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்கள் காரணமாக விளங்குவதாகக் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு பிறந்த குழந்தையின் ஆயுட்காலம் ஏறத்தாழ 84 ஆண்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் 100 வயதை எட்டியவர்களில் ஒருவர் திரு காசிம் சுல்தான். கடந்த மாதம் 20ஆம் தேதி தமது 100வது பிறந்தநாளை இவர் கொண்டாடினார். தமது 12 பிள்ளைகளின் தொலைபேசி எண்களை இவரால் இன்னமும் நினைவில் வைத்து கூற முடிகிறது. இவருக்கு 32 பேரப்பிள்ளைகளும் 43 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
தமது 90 வயது மனைவி, மகள், மருமகனுடன் ஒரே வீட்டில் வசிக்கும் திரு காசிம், சொந்தமாக துணிமணிகளைத் துவைத்து அவற்றை இஸ்திரி செய்கிறார்.
இவரது நீண்ட ஆயுட்காலத்திற்கான ரகசியம் குறித்து கேட்டதற்கு, “நான் குளிர் பானங்களை அருந்த மாட்டேன். ஒவ்வொரு நாளும் தொழுவதற்கு அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்,” என்றார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் 80 வயது மற்றும் அதற்கும் மேல் வயதுடையவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
உலகிலேயே ஆக நீண்ட ஆயுட்காலத்தை சிங்கப்பூரர்கள் கொண்டிருப்பதாக டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் மூப்படைதல் ஆய்வு, கல்வி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஏஞ்சலிக் சான் கூறினார்.
ஆனால், சமுதாயத்தில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
நீண்டகாலம் வாழும் அதேவேளையில், வயதான காலத்தில் மூத்தோர் பலர் உடல்நலம் நலிவுற்று இருப்பதாக இணைப் பேராசிரியர் சான் கூறினார். கூடுதலானோருக்கு ‘டிமென்ஷியா’ எனப்படும் ஞாபக மறதிநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை ஆய்வு காட்டுவதாக அவர் சொன்னார்.
மூத்தோருக்கு உடல்நலம் நலிவுற்று இருப்பதால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, மூத்தோருக்குப் பராமரிப்பு வழங்குவதற்கு குடும்பத்தார் பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.