Space @ Tuas தங்கும் விடுதியிலிருந்து 342 வெளிநாட்டு ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தும் வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை ஒருவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதாக இன்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆர்ஆர்டி பரிசோதனைகளில் அந்த ஆடவருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த விடுதியின் 2 புளோக்குகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு வசிப்பிடத்திலேயே தங்கியிருக்கும ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அந்த ஊழியர் வசிக்கும் விடுதியில் பாதுகாப்பான நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படாததையடுத்து, 27 நிறுவனங்களில் பணிபுரியும் 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விடுதி நடத்துநர்கள், நிறுவனங்கள், ஊழியர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு விடுதிகளில் பாதுகாப்பான வசிப்பிட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை மனிதவள அமைச்சு நினைவூட்டியது.
அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டால், யாருக்காவது தொற்று உறுதி செய்யப்படும் நிலையில் அவர் வசிக்கும் பிரிவு அல்லது தளத்தில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
“அனைத்து தரப்பினரின் ஒட்டுமொத்த முயற்சிகளால் மட்டுமே வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும். நமது வர்த்தகங்களும் பெரிதும் பாதிக்கப்படாது,” எனவும் அமைச்சு குறிப்பிட்டது.