மலேசிய-சிங்கப்பூர் எல்லையைத் திறப்பது குறித்து சிங்கப்பூருடன் மலேசிய அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அந்நாட்டுப் பொருளியல் விவகார அமைச்சர் முஸ்தஃபா முகம்மது தெரிவித்துள்ளார். மலேசியாவில் அண்மையில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையிலும் அவர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
“மலேசியா கிட்டத்தட்ட பாதியளவு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை இழந்துவிட்டது. அவர்களில் 50 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள். எனவே, மலேசியாவில் சுற்றுப்பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று திரு முஸ்தஃபா கூறினார்.
சிங்கப்பூரிலிருந்து வருபவர்களை நம்பி ஜோகூர் பொருளியல் இருப்பதாலும் ஜோகூரில் வசிக்கும் மலேசியர்கள் ஏராளமானோர் சிங்கப்பூரில் பணிபுரிவதாலும் சிங்கப்பூர் உடனான எல்லையைத் திறந்துவிடக் கோரி ஜோகூர் மாநில அமைச்சர்கள் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஜோகூரில் வேலையின்மை விகிதம் 18 விழுக்காடாக உச்சத்தை எட்டியுள்ளதாக ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது முன்னதாகக் கூறியிருந்தார். அம்மாநிலத்தில் 35,000 பேர் வேலையில்லாமல் அவதியுறுகின்றனர்.
சிங்கப்பூர் எல்லையைத் திறந்துவிடுவது தொடர்பில் மலேசிய தரப்பிலான பேச்சுவார்த்தையை வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் வழிநடத்துவதாக திரு முஸ்தஃபா தெரிவித்தார்.
“கொவிட்-19 சூழலால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சுகாதார, பொருளியல் விவகாரங்களுக்கு இடையே சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
“நேரம் வரும்போது சிங்கப்பூர் உடனான மலேசிய எல்லை திறக்கப்படும் என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். எல்லை கட்டங்கட்டமாக திறக்கப்பட்டாலும் பரவாயில்லை. இதன் மூலம் ஜோகூர் பொருளியல் மீட்சியடையும்,” என்று செய்தியாளர்களிடம் திரு முஸ்தஃபா கூறினார்.