சிங்கப்பூர் தற்காலிக பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளும் நோக்கத்துடன் புதிய வட்டாரங்களைத் தொடர்ந்து நாடும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று அறிவித்தார்.
ஹாங்காங்குடன் சிங்கப்பூர் இத்தகைய முதலாவது ஏற்பாட்டை செய்து கொண்டு இருந்தது. ஆனால் அந்த ஏற்பாடு தொடங்கவிருந்தபோது ஹாங்காங்கில் கிருமித்தொற்று அதிகமானதால் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டது.
என்றாலும் சிங்கப்பூர் தற்காலிக பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும் நோக்கத்தில் புதிய நாடுகளை நாடும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் ஒருதலைபட்சமாக தன்னுடைய எல்லைகளைப் பல நாடுகளுக்கு திறந்துவிட்டு இருக்கிறது. அத்தகைய நாடுகளுடன் தற்காலிக பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
திரு ஓங், சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆஸ்திரேலியா, புருணை, சீனா, நியூசிலாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து குறுகிய காலப் பயணங்களை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு வருவோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நாடுகள் வெற்றிகரமான முறையில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுத்து இருக்கின்றன.
இந்த நாடுகளிடம் பரந்த அளவிலான பொது சுகாதார கண்காணிப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன என்பதால் சிங்கப்பூர் இவற்றைச் சேர்ந்த பயணிகளுக்குத் தன் கதவைத் திறந்துவிட்டுள்ளது.
இந்நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை.
இருந்தாலும் விமானப் பயண அனுமதிக்கு இவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். சிங்கப்பூருக்கு வரும்போது இவர்களுக்குத் தொற்று இருக்கக்கூடாது.
இங்கிருக்கும்போது அவர்கள் 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். "சிங்கப்பூர் இந்த நாடுகளுக்குத் தன் கதவைத் திறந்துவிட்டு இருப்பதால் அவை பதிலுக்கு இதேபோலவே செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
"சிங்கப்பூரில் கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் அநேகமாக அடுத்த ஆண்டில் பல்வேறு நாடுகளும் சிங்கப்பூருடன் தற்காலிக பயண ஏற்பாடுகளை செய்துகொள்ள முன்வரும் என்று நம்பலாம்," என திரு ஓங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்-ஹாங்காங் தற்காலிக பயண ஏற்பாடு நவம்பர் 22ஆம் தேதி தொடங்க இருந்தது. கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு இடையில் அந்தப் பயணத்தைத் தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஹாங்காங்கில் அண்மையில் கொவிட்-19 தொற்று கூடிவிட்டதால் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் தங்களுக்கிடைப்பட்ட தற்காலிக பயண ஏற்பாட்டை அடுத்த ஆண்டு தொடங்கலாம் என்று முடிவு செய்து இருப்பதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சென்ற வாரம் தெரிவித்தது.
ஹாங்காங்கில் புதிதாக 101 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக கடந்த சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அங்கு தொற்று கூடுவதால் அதைத் தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.