யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் புலனாகா கலாசார மரபுடைமை பட்டியலில் சிங்கப்பூரின் உணவங்காடி கலாசாரம் சேர்க்கப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 16) 24 பேர் கொண்ட அனைத்துலகக் குழு ஒருமனதாக சிங்கப்பூரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.
தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், வர்த்தகர்கள் சங்கத்தின் சம்மேளனம் ஆகிய அமைப்புகளின் மூன்றாண்டு முயற்சியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அரசாங்கங்கள் அளவிலான குழுவின் 15ஆவது கூட்டத்தில் விவாதமின்றி சிங்கப்பூரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதன்முதலில் அங்கம் வகிக்கிறது.
இந்தப் பட்டியலில் உணவங்காடி கலாசாரம் இடம்பெற்றுள்ளது குறித்து அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், இதர அமைச்சர்கள் தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
பல வழிகளில் சிங்கப்பூரர்களின் அடையாளத்தை உணவங்காடி கலாசாரம் வடிவமைத்துள்ளதாகவும் சிங்கப்பூரின் பல கலாசார சமுதாயத்தின் பன்முகத்தன்மைக்குப் பங்களித்துள்ளதாகவும் அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.
பல தலைமுறைகளாக உணவங்காடிக் கடைகளை நடத்தி வந்துள்ளவர்களுக்கு மாபெரும் நன்றியைத் தெரிவிக்கவேண்டும் என்றார் பிரதமர் லீ. அவர்களது வியர்வை, கடின உழைப்பு, தொழில் ஈடுபாடு இல்லாமல் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்காது என்றார் அவர்.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள 110க்கும் மேற்பட்ட உணவங்காடி நிலையங்களில் இயங்கும் கிட்டத்தட்ட 6,000 உணவங்காடி கடைக்காரர்களுக்கு வரும் வாரங்களில் வில்லைகள் வழங்கப்படவுள்ளன. தங்களது கடையின் முகப்பில் யுனெஸ்கோ புலனாகா கலாசார மரபுடைமைப் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றதைக் குறிக்கும் அந்த வில்லைகளை அவர்கள் ஒட்டிக்கொள்ளலாம்.
உலக வரைப்படத்தில் சிங்கப்பூரின் உணவு கலாசாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்த அங்கீகாரம் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.