இந்தியாவில் தடுப்பூசி போடும் பெரும் இயக்கம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் ஊசி போடப்படும். இவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 மில்லியன் என்று கணக்கிடப்படுகிறது.
பிறகு 50 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு ஊசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது.
இந்தியா கொவிட்-19 தடுப்பூசி பரிசோதனைகளை நாடு முழுவதும் நடத்தி உள்ளது. பல மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்தியா ஒன்று அல்ல, சொந்தமாக உருவாக்கும் இரு கொவிட்-19 தடுப்பூசிகளுடன் உலக மானிட இனத்தைப் பாது காக்க தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
கொவிட்-19 பரவி வரும் சூழலில் அந்தக் கிருமிக்குப் பலியாவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது.
இத்தகைய ஒரு நிலையில் உலக மக்களைப் பாதுகாக்க இந்தியா தான் சொந்தமாக உருவாக்கும் இரண்டு தடுப்பூசிகளுடன் தயாராக இருக்கிறது என்று மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் மெய்நிகர் மாநாட்டில் இன்று உரையாடிய பிரதமார் இவ்வாறு பேசினார்.
இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடர்பில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை கலந்து ஆலோசிப்பார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியையும் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் ‘கோவேக்சின்’ தடுப்பூசியையும் அவசரகாலத்துக்குப் பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இவ்வேளையில், இந்தியாவில் மொத்தம் 180 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 அதிகம் தொற்றிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் இந்தக் கிருமி காரணமாக ஏற்படக்கூடிய மரணங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிகவும் குறைவாக இருக்கின்றன.
ஏறக்குறைய ஒரு மாத காலமாக கிருமித்தொற்று வேகமாகக் குறைந்து வருகிறது. குணமடை வோர் அதிகமாகி வருகிறார்கள்.