கொவிட்-19 கொள்ளைநோயின் பிடியிலிருந்து உலகம் இன்னும் கொஞ்சம்கூட விடுபடாததால் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் சிங்கப்பூர் தீவிரம் காட்டி வருகிறது.
தினமும் 70,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடும் வகையில் தீவு முழுவதும் தடுப்பூசி மையங்களை புதிதாக ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த மாதத்திலிருந்து 36 தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை சுகாதார அமைச்சு பணியில் அமர்த்த உள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி மையமும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2,000 பேருக்கு ஊசி போடுவதற்கான வசதிகளைக் கொண்டிருக்கும்.
இவை தவிர, பத்து நடமாட்ட தடுப்பூசிக் குழுக்களை அந்நிறுவனம் நியமிக்கும். தாதிமை இல்லங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அக்குழுவினர் சென்று தடுப்பூசி போடுவர்.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், நான்கு தாதியர், மூன்று நிர்வாகப் பணியாளர் போன்றோர் இருப்பர்.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி இந்த நடமாடும் குழு செயல்படும். மருத்துவ அவசரநிலையைக் கையாள மருத்துவர் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
தடுப்பூசி மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படவேண்டும்.
தடுப்பூசிக்கான முன்பதிவுக்கும் தடுப்பூசி நடவடிக்கை ஆவணங்களில் புதிய தகவல்களைச் சேர்ப்பதற்கும் தேசிய முன்பதிவு முறையை மட்டுமே அவை பயன்படுத்தவேண்டும்.
தடுப்பூசி மையங்களும் குழுக்களும் படிப்படியாக ஏற்படுத்தப்படும். இவற்றின் எண்ணிக்கை மாறுதலுக்கு உரியது. இவை 12 மாதங்கள் வரை செயல்படும்.
காலியாக உள்ள பள்ளிக்கூடங்கள், சமூக மன்றங்கள், விளையாட்டு அரங்குகள் போன்றவை தடுப்பூசி போடுவதற்கான இடங்களாக பயன்படுத்தப்படலாம்.
எல்லா தடுப்பூசிகளையும் இவ்வாண்டுக்குள் போட்டு முடிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.
இதன் தொடர்பிலான கூடுதல் செய்திகளுக்கு நாளைய (ஜனவரி 20) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!