புதிதாக அமையவுள்ள ஜோகூர் பாரு - சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்பின் மூலம் ஜோகூரிலிருந்து 5 நிமிடங்களில் சிங்கப்பூரை அடைந்துவிட முடியும் என்று குறிப்பிட்ட ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், அடுத்த ஐந்தாண்டுகளில், அந்த இணைப்புப் பணி நிறைவடைவதையடுத்து, ஜோகூரின் பொருளியல் மேலும் சிறப்பாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாள் ஒன்றுக்கு 300,000 பேர் வரை ஆர்டிஎஸ் இணைப்பின் மூலம் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இணைப்புப் பணிகள் நிறைவடைவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் நேர்காணல் ஒன்றின்போது சொன்னார்.
ஜோகூரில் சொத்துகளின் விலை அதிகரிக்கும் என்று கூறிய அவர், ஜோகூரில் வசிப்பது, வேலை செய்வது போன்றவை இரு தரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என்றார்.
இரு தரப்புகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கக்கூடியது ஆர்டிஎஸ் என்ற அவர், சிங்கப்பூரின் இடத் தேவைகள் மீதான அழுத்தம் குறையும் என்று கூறினார். மேலும் இவ்விரு தரப்பினருக்கும் இடையே ஒருங்கிணப்பு மேம்படும் என்றார்.
தொழில்நுட்ப, மருத்துவ முனையமாக ஜோகூர் உருவெடுப்பதற்கான பெரும் ஆற்றல் இருப்பதாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜோகூரில் ஹோட்டல், விருந்தோம்பல், சுற்றுப்பயணத் துறை போன்றவையும் வலுவான வளர்ச்சி காணும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் பக்கத்தில் 1.3 கி.மீ., ஜோகூர் பக்கத்தில் 2.7 கி.மீ., என மொத்தம் 4 கி.மீ. நீள ஆர்டிஎஸ் இணைப்பு சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் முனையத்திலிருந்து ஜோகூரின் புக்கிட் சாகர் முனையத்தில் முடிவுறும்.
புக்கிட் சாகர் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கின. ஆர்டிஎஸ் இணைப்பு ரயில் நிலையங்கள் இரு தரப்பிலும் உள்ளூர் போக்குவரத்து கட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படும்.
சிங்கப்பூர் பகுதியில் இந்த இணைப்புப் பாதை நிலையம் நிலத்துக்கடியில் அமையும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.
இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான பயணத்துக்கு 5 நிமிடங்கள் எடுக்கும். உச்ச நேரத்தில் பயண இடைவேளை 3.6 நிமிடங்களாக இருக்கும்.
மலேசியாவுக்கு பெரும் பொருளியல் நன்மைகளை இந்த ஆர்டிஎஸ் இணைப்பு உருவாக்கித் தரும் என்று கூறிய சுல்தான், காஸ்வேயில் நீண்டகாலமாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கும் தீர்வு வரும் என்றார்.
இந்தத் திட்டப்பணிக்கு ஆகும் மொத்த செலவை இரு நாடுகளும் 61:39 என்ற விகிதத்தில் ஏற்றுக்கொள்ளும். மலேசியா 3.716 பில்லியன் ரிங்கிட் செலுத்தும். ஆர்டிஎஸ் இணைப்புப் பாதை 2026ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்குத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.