ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பாடி வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று கலாசார, சமூக இளையர் துறை அமைச்சு இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது.
ஆனால், வழிபாட்டுச் சேவையின்போது முகக்கவசத்தை அகற்றாமல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே பாட முடியும் என அமைச்சு கூறியது.
கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முதலாம் கட்டத் தளர்வின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், வழிபாட்டில் ஈடுபடுவோர் இதுவரை பாட அனுமதி அளிக்கப்படவில்லை.
வழிபாட்டில் ஈடுபடுவோர் பாடுவதற்காக நல்ல காற்றோட்ட வசதி செய்து தரப்பட வேண்டும் என்று அமைச்சு கூறியது. வழிபாட்டுத் தலங்களில் கதவுகளையும் சன்னல்களையும் திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்ட வசதியைச் செய்து தர முடியும்.
வழிபாட்டுச் சேவைகளுக்கு இடையில் வழிபாடு நடைபெறும் இடம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
வழிபாட்டில் ஈடுபடுவோரில் பாடுவோர் எட்டுப் பேர் வரை குழுவாக இருக்கலாம். அத்தகைய குழுக்களுக்கு இடையே 2 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி இருப்பதை உறுதிசெய்ய வழிபாட்டுத் தலங்களுக்கு ஊக்குவிக்கப்படுகிறது.
சமய நூல்கள், வழிபட பயன்படும் பாய்கள் போன்றவற்றை ஒருவர் மற்றொருவருடன் பகிரக்கூடாது. காரணம், இத்தகைய நடவடிக்கையால் கொவிட்-19 பரவும் சாத்திய அதிகரிக்கிறது.
முன்னதாக, வழிபாட்டுச் சேவையை நடத்த 30 பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் ஐவர் மட்டும் முகக்கவசம் அணியாமல் பாட அனுமதிக்கப்பட்டது.
ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து இந்த 30 பேர் எண்ணிக்கை வரம்பில் மாற்றம் இல்லை என்று அமைச்சு நேற்று கூறியது. ஆனால், முகக்கவசம் அணியாமல் பாட அனுமதிக்கப்படும் அந்த ஐவர் போக, முகக்கவசம் அணிந்தவாறு பாட மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், வழிபாட்டுச் சேவையை நடத்துவோருக்கும் வழிபடுவோருக்கும் இடையே குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
இதற்கிடையே, ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து வழிபாட்டுத் தலங்களில் திருமண சடங்குகளில் பங்கேற்க 250 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 100 ஆக உள்ளது. ஆனால், சடங்கிற்கு முன்னர் திருமணத் தம்பதி கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து வழிபாட்டுத் தலங்களில் இறுதிச்சடங்குகளிலும் கண்விழிப்புச் சடங்குகளிலும் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படும். தற்போது இந்த எண்ணிக்கை 30 ஆக உள்ளது. ஆனால், இறந்தவரின் உடலை நல்லடக்கம் அல்லது தகனம் செய்யும் நாளில்தான் 50 பேர் வரை ஒன்றுகூட அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில், வழிபாட்டுச் சேவை நடத்தும் சமய அமைப்புகள் ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து தங்களது வளாகங்களின் நுழைவாயில்களில் ‘சேஃப்என்ட்ரி கேட்வே’ முறையை வைக்க வேண்டும். வழிபாட்டில் 100 பேருக்கும் மேற்பட்டோர் பங்கேற்றால் மட்டும் இந்த ஏற்பாடு பொருந்தும். வழிபாட்டில் பங்கேற்போர் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்தால் இந்த ஏற்பாடு தேவையில்லை.