துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட், நான்காம் தலைமுறை குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரை நீண்டகாலத்துக்கு வழிநடத்திச் செல்லக்கூடிய இளைய தலைவர் ஒருவருக்கு தாம் வழிவிடுவதாக திரு ஹெங் கூறியிருக்கிறார்.
திரு ஹெங் துணைப் பிரதமராகவும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்ந்து பணியாற்றுவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் முதல் உதவித் தலைமைச் செயலாளராகவும் அவர் தொடர்ந்து நீடிப்பார்.
இரு வாரங்களில் அடுத்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்போது, நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு ஹெங் விலகுவார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மேற்கூறப்பட்ட இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
திரு ஹெங்கின் முடிவை மதித்து அதை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
நிதி அமைச்சராக திரு ஹெங் தனிச்சிறப்புவாய்ந்த பணியாற்றியதற்காக தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் லீ சொன்னார்.
திரு ஹெங் தம்முடனும் மற்ற மூத்த அமைச்சர்களுடனும் சேர்ந்து இளைய தலைவர்களை வழிநடத்த தொடர்ந்து உதவுவார் என்று பிரதமர் லீ கூறினார்.
திரு ஹெங்கின் இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும் அதை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி நான்காம் தலைமுறை தலைமைத்துவம் அறிக்கை வெளியிட்டது.