வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி நேற்றுக் காலையில் தீவு விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓரமாக நின்றிருந்த 'டிப்பர்' லாரியின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வூழியர்களில் ஒருவர் மரணமடைந்தார். அதில் பயணம் செய்த மற்ற 16 ஊழியர்களும் காயமடைந்தனர். லாரியின் 36 வயது ஓட்டுநர் கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதே இவ்விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். விபத்தைத் தொடர்ந்து லாரியில் சென்ற வெளிநாட்டு ஊழியர்களில் இருவர் சுயநினைவை இழந்ததாக போலிஸ் தெரிவித்தது. அந்த 17 வெளிநாட்டு ஊழியர்களும் 'பிரைட் ஏஷியா கன்ஸ்ட்ரக்ஷன்' எனும் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் என அறியப்படுகிறது.
படம்: வான்பாவ் நாளிதழ் வாசகர்