கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக கிட்டத்தட்ட 52,000 பெற்றோர் அல்லது மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 1) இரவு ஏழு மணி வரை கிடைத்த தகவலின்படி, 26,000க்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
சாதாரண நிலை, வழக்கநிலை, மேல்நிலைத் தேர்வுகள் எழுதும் மாணவர்களும் இந்நிலைகளுக்கு ஒப்பான முக்கிய தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்னுரிமை பெறுவர் என்று நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
“பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் பயிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவது, நம் கல்விக் கழகங்கள் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நாடளாவிய பெரும் முயற்சிகளின் ஓர் அங்கமானது,” என்று கல்வி அமைச்சு இன்று குறிப்பிட்டது.
இந்நிலையில், தேசிய தடுப்பூசித் திட்டத்தின் அடுத்த படியாக 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்கள், தங்களின் கொவிட்-19 தடுப்பூசிக்கு ஜூன் 1 முதல் பதிந்துகொள்ளலாம் என்று அரசாங்கம் நேற்று (மே 31) அறிவித்திருந்தது. 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் மாணவர்கள் 18 வயதுக்குக் கீழ் இருந்தால் அவர்களின் பெற்றோருக்குத் தகவல் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது.
தற்போது ‘ஃபைசர்-பயோஎன்டெக்’ தடுப்பூசி மட்டுமே சிங்கப்பூரில் 12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்குப் போடப்படும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.