சமூகத்தில் தொற்று குறைந்து வருவதால், வரும் திங்கள்கிழமையிலிருந்து இரண்டு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
முதல் கட்டமாக, ஜூன் 14ஆம் தேதி முதல் ஐவர் வரை ஒன்றுகூடலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலைமை மேலும் சீரடைந்தால், இரண்டாம் கட்டத் தளர்வாக 21ஆம் தேதியிலிருந்து உணவகங்கள், உணவு, பானம் விற்பனையாகும் இடங்களிலும் மக்கள் அமர்ந்து உணவு உண்ணலாம். வரும் 20ஆம் தேதி, தந்தையர் தினம் அன்று பொதுமக்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ண முடியாது.
மக்கள் அதிகமாக பொது இடங்கள், வேலையிடங்கள், பொதுப் போக்குவரத்து போன்றவற்றில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கநிலையாகத் தொடரும் என்று அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
"படிப்படியாக நாம் அதிக நடவடிக்கைகளை அனுமதிக்கும் அதே வேளையில், அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தினமும் சில தொற்று சம்பவங்கள் நிகழலாம். அது கிருமியின் இயல்பு.
"எனினும், ஒட்டுமொத்த தொற்று சம்பவங்களும் பெரிதான தொற்றுக் குழுமங்களும் உருவாகாமல் இருப்பதைத் தடுப்பதே நோக்கம்," என்று வர்த்தக, தொழில் அமைச்சரும் அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான கான் கிம் யோங் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.
சமூக ஒன்றுகூடல் அளவை விரிவுபடுத்தும் அதே வேளையில், உல்லாச கப்பல் பயணங்கள், கண்காட்சிகள், பொது நூலகங்கள் போன்ற மக்கள் செல்லும் இடங்களில் தற்போது நடப்பிலுள்ள 25% அளவு மட்டுமே மக்கள் கூடலாம் என்ற கட்டுப்பாடு ஜூன் 14லிருந்து 50% ஆக அதிகரிக்கப்படும்.
அதேபோல், திரைப்படக் காட்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், வழிபாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கையும் 50% ஆக அதிகரிக்கலாம்.
இதில் 50 பேருக்கு மேல் கூடும் நிகழ்ச்சிகளுக்கு, கொவிட்-19 கிருமி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்டத் தளர்வாக வரும் 21ஆம் தேதியிலிருந்து உணவு, பானக் கடைகளில் ஐவர் கொண்ட குழு கூடலாம்.
இதில், அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.