தமிழ் இலக்கியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் தமிழ்மொழி, தமிழ் கலாசாரத்துடன் இணைய முடிவது பெரும் வலிமையைத் தந்துள்ளது என்றார் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்.
"வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வேலையில் சவால்கள் என்று வரும்போது என் தாய்மொழி வழங்கிய கலாசார அடித்தளத்திற்குச் செல்கிறேன். சீனர்களும் மலாய்க்காரர்களும் அவர்களின் சொந்த தாய்மொழியைப் பற்றி அவ்வாறு சிந்திப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது," என்றார் திரு சண்முகம்.
'ரீச்' அமைப்பு, சீன நாளிதழான 'சாவ்பாவ்' இணைந்து நடத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு நேற்று பேசினார் அமைச்சர் சண்முகம்.
அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தால் சீன, தமிழ், மலாய் போன்ற எல்லாத் தாய்மொழி ஆற்றல்களும் கலாசாரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்தால் நமது தனிப்பட்ட ஆற்றலும் கலாசார அடித்தளமும் தற்போதைய நிலையில் இருக்காமல் போக வாய்ப்பு உண்டு என்றும் மேலும் குறிப்பிட்டார் அமைச்சர் சண்முகம்.
'பல கலாசார சமுதாயத்தில் சீன சமூகத்தின் பங்களிப்பு' என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தேசிய வளர்ச்சி, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், 'ஹேரி இலியாஸ் பார்ட்னர்ஷிப்' நிறுவனத் தின் ஆலோசகர் திரு ஹீ தெங் ஃபோங், சிங்கப்பூர் சீனக்
குலமரபுச் சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு டான் ஆயிக் ஹோக், நடிகரும் இயக்குநருமான திரு டே பிங் ஆகியோர் மற்ற நான்கு பேச்சாளர்கள். இனம், சமூக நீதி குறித்த அம்சங்கள் பற்றிய கலந்துரையாடல் அதிகமாக ஆங்கில மொழியில் பேசப்படுவதாகவும் சீன சமூகத் திடையே அதிகமான கலந்துரையாடல் இல்லை என்று கூறினார் திருவாட்டி சிம்.
"இனம், இனவாதம் போன்ற முக்கிய அம்சங்களில் கலந்துரையாடல்கள் வேறுபட்ட பாதைகளில் நீண்ட காலம் செல்ல முடியாது. கலந்துரையாடல் இப்போது ஒன்றிணைந்துள்ளது. இனவாதம் குறித்த பல பெரிய சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்கும், 'சைனிஸ் பிரிவிலேஜ்' என்று பலமுறை கூறப்படுவது குறித்தும் சீன சமூகம் பதில் அளிக்கவேண்டும்," என்றார் அவர்.
'சைனிஸ் பிரிவிலேஜ்' அதாவது மற்ற இனத்தவர்களை ஒப்பிடும்போது சீனர்களுக்கு அதிக சலுகை கிடைக்கிறது என்ற சிந்தனை சமூகத்தில் அண்மையில் நிலவி வருகிறது. அமெரிக்காவின் வரலாற்றில் வெள்ளை இனத்தவர்கள் கருப்பு இனத்தவர்களை அடிமைப் படுத்திய காலத்தில் உருவான சிந்தனைதான் 'வயிட் பிரிவிலேஜ்'.
அதை அடிப்படையாக கொண்டு சிங்கப்பூர் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் சீனர்களாக இருக்கும் நிலையில் வரும் சிந்தனைதான் 'சைனிஸ் பிரிவிலேஜ்'.
"எந்த ஒரு சமுதாயத்திலும் பெரும்பான்மையினராக இருந்தால் அதில் குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன. வெளிப்படையாக பேசினால் அதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் என் பார்வையில் அது சலுகைக்குச் சமமாகாது. பெரும்பான்மையினராக இருப்பதால் வரும் இயல்பான நன்மைகளும் சிறுபான்மையினராக இருப்பதால் வரும் குறைபாடுகளும் சலுகைகளும் அமைப்பு சார்ந்த இனவாதத்திற்கு வேறுபடும். அரசாங்க கொள்கைகள் இதைச் சமாளிக்கின்றன. பெரும்பான்மையினரும் உணர்வுபூர்வமாக நடந்துக்கொள்ளவேண்டும்," என்றார் அமைச்சர் சண்முகம்.
அடிமை முறையால் அமெரிக்காவில் இன்று வரை தாக்கம் அளித்து வரும் ஒரு விளைவுதான் வசிப்பிட பிரித்தல் என்று விளக்கிய அமைச்சர் சண்முகம், இத்தகவலை ஒரு வரைபடம் மூலம் காட்சிப்படுத்தினார். இனத்தால் வசிப்பிடம் தீர்மானமாகும்போது அந்த இடங்களில் வசிப்பவர்கள் செல்லும் பள்ளி, வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் ஆகியவற்றில் தாக்கம் ஏற்படுகிறது என்று சுட்டினார் சண்முகம்.
"சமுதாயப் பிரிவு என்பது, என் கண்ணோட்டத்தில் ஒரு கடுமையான கெடுதல். அது எதிர்காலத் தலைமுறைகளையும் பாதிக்கும்," என்றார் அமைச்சர்.