சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சீனாவின் சினோவேக் தடுப்பூசி சேர்க்கப்படுவதாக கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இன்று சனிக்கிழமை (அக்டோபர் 23) அறிவித்துள்ளது.
தற்போதுள்ள ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்களுக்கு இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார் பணிக்குழுவின் இணைத் தலைவரான வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்.
ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி, மொடர்னா ஆகிய ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசிகள் தற்போது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மூன்று முறை சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கருதப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
முதல் சினோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 28 நாள்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து 90 நாள்கள் கழித்து மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ், சினோவேக் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.