கொவிட்-19க்கு எதிராக சினோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதால் பாதக விளைவுகள் ஏற்பட்டதாகச் சந்தேகித்து 90 பேர் அதுபற்றி தெரிவித்ததாக அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டனர்.
அந்த ஊசி போட்டுக்கொண்டவர்களில் ஐவருக்கு கடுமையான பாதிப்புஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆகஸ்ட் 31 நிலவரப்படி 168,439 சினோவேக் தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன. இதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது பாதிப்புகள் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விகிதாச்சாரம் 0.053% ஆக இருக்கிறது.
கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக கூறுபவர்களின் விகிதம் 0.003% ஆக உள்ளது. சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பு தொடர்பான புதிய விவரங்களை வெளியிட்டது.
தேசிய தடுப்பூசி செயல்திட்டத்தின்கீழ், ஆகஸ்ட் 31 நிலவரப்படி, 8,716,085 ஃபைசர்-பையோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன என்று அந்த விவரங்கள் தெரிவித்தன.
தேசிய தடுப்பூசி செயல்திட்டத்தில் இடம்பெறும் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோரில் மொத்தம் 11,737 பேருக்கு, அதாவது 0.13%க்கு பாதக விளைவுகள் ஏற்பட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவோரில் 498 பேர் (0.006%) கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பொதுவாக ஏற்படக்கூடிய பாதக அறிகுறிகளே அவர்களிடத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மயக்கம், மூச்சுவிட சிரமம், மார்பு இறுக்கமாவது போன்ற உணர்வு அல்லது சங்கடம், இதயத் துடிப்பு, தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், வலி, ஒவ்வாமை அறிகுறிகள் போன்றவை இவற்றில் அடங்கும். இந்த பாதிப்புகள் பொதுவாக ஓரிரு நாட்களில் அகன்றுவிடும் என்று ஆணையம் தெரிவித்தது.
கடுமையான பாதிப்புகளைப் பொறுத்தவரை ஒவ்வாமையே முக்கியமான ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் இதயத் தசைகள் அழற்சி அடையும் நிலை மிகமிக அரிதாக ஏற்படுகிறது என்பது வெளிநாடுகளிலும் இங்கேயும் தெரியவந்துள்ளது.
மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்பது முக்கியமான ஒன்று என ஆணையம் சுட்டியது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு முகத்தசைகள் பலவீனமடையும் ஒரு பாதிப்பும் தெரியவந்துள்ளது.
பொதுவாக இந்த பாதிப்பில் இருந்து சிகிச்சை இல்லாமலேயே முற்றிலும் குணமடைந்துவிடலாம் என்பதையும் அது சுட்டியது.
மொத்தமாகப் பார்க்கையில், பைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய நன்மைகள், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைவிட மிக அதிகமாக இருக்கின்றன என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.
கொவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவுகளை இந்த ஆணையம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வரும். பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க ஏற்புடைய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.