ஹாங்காங்: சீனாவின் சினோவேக் கொவிட்-19 தடுப்பூசியைவிட ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பத்து மடங்கு கூடுதலாக நோய்எதிர்ப்புப்பொருளை (ஆன்டிபாடி) உற்பத்தி செய்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஹாங்காங் சுகாதார ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த கட்டுரையை ‘தி லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
சினோவேக், சினோஃபார்ம் போன்ற தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டோரிடத்தில் மூன்றாவதாக ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போடுவது எந்த அளவிற்கு நோயெதிர்ப்புப் பொருள் உற்பத்தியையும் பாதுகாப்பையும் உயர்த்தும் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்திய ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், தாய்லாந்து போன்ற நாடுகள் 3வது தடுப்பூசி குறித்துப் பரிசீலித்து வருகின்றன.