முதன்மை வட்டாரங்களிலும் மத்திய வட்டாரத்திலும் கட்டப்பட இருக்கும் வருங்கால வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்பு காலம் 10 ஆண்டாக இருக்கும்.
மேலும் அந்த வீடுகளுக்காக வழங்கப்பட்ட கூடுதல் மானியத்தை மறுவிற்பனை சமயத்தில் அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டும். பத்து ஆண்டு வரை அந்த வீட்டை விற்கமுடியாது.
அத்துடன் இத்திட்டத்திற்கு உட்பட்ட வீடுகளை முழுமையாக வாடகைக்கு விடமுடியாது.
புதிய முதன்மை வட்டார பொது வீடமைப்பு முன்னோடித் திட்டத்தில் (பிஎல்எச்) இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் சில இவை. முதன்மை வட்டார வீவக வீடுகள் கட்டுப்படியானதாகவும் எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலும் இந்தப் புதிய வீடமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். இந்த முறையின்கீழ் கட்டப்பட இருக்கும் முதல் வீடமைப்புத் திட்டம் அடுத்த மாதம் ரோச்சோரில் தொடங்குகிறது.
முதன்மை வட்டார வீடுகளை மறுவிற்பனைச் சந்தையில் வாங்கு வோருக்கு வரம்பும் விதிக்கப்
படுகிறது. மாத வருமானம் $14,000க்கு மிகாத குடும்பங்களே அந்த வீடுகளை வாங்கமுடியும்.
அத்துடன் வீட்டை வாங்குவோரில் குறைந்தபட்சம் ஒரு விண்ணப்பதாரராவது சிங்கப்பூர் குடிமகனாக இருப்பது அவசியம்.
முதன்மை வட்டார வீட்டு முறையின்கீழ் சில வீடுகள் வீவகவின் மணமான பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும்.
விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பிள்ளை ஒரே வட்டாரத்தில் வசித்தால் வீடு ஒதுக்கீட்டில் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போது, இந்தத் திட்டத்தின்கீழ் முதன்முறை வீடு வாங்குவோருக்கு புதிய வீடுகளில் 30 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது.
புதிய வீடமைப்பு முறையின் நோக்கங்கள் குறித்து திரு லீ செய்தியாளர்களிடம் விளக்கினார்.
முதல்முறை வாங்கும்போதும் அடுத்தடுத்து மறுவிற்பனைச் சந்தையில் வாங்கும்போதும் முதன்மை வட்டார பொது வீடமைப்பு வீடுகள் கட்டுப்படியாகக்கூடியனவாக, எளிதில் அணுகக்கூடியனவாக, எல்லா சிங்கப்பூரருக்கும் கிடைக்கக்கூடியனவாக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கங்கள் என்றார் அவர்.
மேலும், இந்தப் புதிய வீடமைப்பு முறை வருங்கால முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்திற்கே பொருந்தும் என்றும் தற்போதைய வீட்டு உரிமையாளர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டமாவது தொடங்கப்படும் என்று குறிப்பிட்ட திரு லீ, இருப்பினும் அதன் விகிதாசாரம் ஆண்டுக்காண்டு மாறுபடும் என்றார்.
இவ்வாண்டு சாதனை அளவில் வீவக வீடுகள் கைமாறின. குறிப்பாக, குறைந்தபட்சம் $1 மில்லியன் விலையில் வீட்டு விற்பனை நிகழ்ந்துள்ளது.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் இதுபோன்ற மில்லியன் வெள்ளி வீடுகள் 174 விற்பனை ஆயின.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு முழுமைக்கும் 82 ஆக இருந்தது.
வீவக மறுவிற்பனைச் சந்தை துடிப்புடன் மீண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். மேலும் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலைகள் சாதனை அளவை எட்டின.
இதுபோன்ற கவலைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு புதிய பொது வீடமைப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் கூடுதல் மானியங்கள் மறுவிற்பனையின்போது மீட்டுக் கொள்ளப்படும்.
அதாவது, பொதுச் சந்தையில் முதல்முறை இந்தத் திட்டத்தின் வீட்டை மறுவிற்பனை செய்யும்போது அதற்கான விலையில் குறிப்பிட்டதொரு விழுக்காட்டை வீட்டு உரிமையாளர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் தரவேண்டும் என்றார் திரு லீ.
கழகத்திடம் இருந்து நேரடியாக வீட்டை வாங்கியோருக்கே இது பொருந்தும் என்றும் அடுத்தடுத்த மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
முதன்மை வட்டார புதிய பொது வீடமைப்புத் திட்டத்திற்கான விதிமுறைகள் அறிவிப்பு