தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தை (Vaccinated Travel Lanes) சிங்கப்பூர் 13 நாடுகளுடன் துவங்கியுள்ளது.
இது, கொவிட்-19க்கு முந்திய நிலையில் சாங்கி விமான நிலையத்தின் வருடாந்திர பயணிகள் வருகையில் 15 விழுக்காடாக இருந்திருக்கும். ஆனால், இந்தப் பயணத் திட்டத்தின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவதால், வருடாந்திர பயணிகள் வருகை ஏறத்தாழ 5 விழுக்காடாக அமைந்திடும்.
ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட பயண ஏற்பாடு இம்மாத பிற்பாதியில் நடைமுறைப்படுத்தப்படும்போது, தினமும் சாங்கி விமான நிலையத்திலிருந்து சுமார் 19 விமானப் பயணங்கள் இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, இந்தப் பயணத் திட்டத்திற்கான அன்றாட பயணிகள் எண்ணிக்கை, 2,500லிருந்து 4,000க்கு அதிகரிக்கப்படும்.
இருப்பினும், ஒவ்வொரு விமானத்திலும் கிட்டத்தட்ட 200 பயணிகள் மட்டுமே இடம்பெறுவதால், சிங்கப்பூருக்கும் குறிப்பிட்ட அந்த 13 நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் வருகை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை.
கிருமித்தொற்று நிலவரம், வெளிநாட்டிலிருந்து வருவோரிடையே கிருமித்தொற்றுப் பாதிப்பு, விமானப் பயணங்களுக்கான தேவை ஆகிய அம்சங்களைப் பொறுத்து இந்தப் பயணத் திட்டத்தின்கீழ் விமானப் பயணங்கள் அதிகரிக்கப்படும் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.