சிங்கப்பூரில் மக்களின் உடல் ஆரோக்கியம் குறைந்து வருவதாக தேசிய மக்கள் தொகை சுகாதார கருத்தாய்வு காட்டுகிறது. நாட்பட்ட நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் கவலைகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய கிருமிப்பரவலால் அதிகம் பேர் துடிப்புமிக்க வாழ்க்கை முறையைக் கைவிட்டதால் இந்நிலை மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளோரின் எண்ணிக்கை ஈராண்டுகளில் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. அத்தகையோரின் விகிதம் 2017ல் 24.2லிருந்து 35.5 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. எட்டு மாதங்களாக நீடித்த இந்தக் கருத்தாய்வு மார்ச் 2020ல் நிறைவுபெற்றது.
ஐந்து ஆண்டுகள் நீரிழிவு நோயின் மீதான அரசாங்கத்தின் ‘போர்’ தொடர்ந்து நடைபெற்றபோதும் சிங்கப்பூரின் நீரிழிவு விகிதம் இதே ஐந்து ஆண்டுகளில் 8.6 லிருந்து 9.5க்கு உயர்ந்துள்ளது. வேலைக்குச் சென்று திரும்புவதில் பெரும்பாலான மக்கள் நடமாட்டம் இருந்தாலும் தற்போதைய நிலையில் அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச உடல் உழைப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. கேளிக்கைக்காக மதுபானம் அருந்தும் பழக்கமும் 8.8 விழுக்காட்டிலிருந்து 10.5 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. இது இளம் ஆடவர்களை அதிகம் பாதித்திருப்பதாக கருத்தாய்வு தெரிவித்துள்ளது.
ஆயினும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் இந்தக் கருத்தாய்வு சுட்டியது. பொழுபோக்கிற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுவதை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அதிகரித்துள்ளனர். அத்துடன், புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது உயர்த்தப்பட்டதை அடுத்து புகைப்பிடிப்போரின் விகிதம் 11.8லிருந்து 10.1க்குக் குறைந்துள்ளது.
ஜூலை 2019ஆம் தேதிக்கும் மார்ச் 2020ஆம் தேதிக்கும் இடையே தேசிய மக்கள்தொகை சுகாதார கருத்தாய்வு நடத்தப்பட்டது. இந்தக் கருத்தாய்வுக்காக 6,000 பேர் பேட்டி எடுக்கப்பட்டனர்; 5000 பேருக்கு சுகாதார பரிசோதனை செய்யப்பட்டது.