மலேசியா, 'ஓமிக்ரான்' தொற்று கண்டறியப்பட்டுள்ள அல்லது தொற்றுப் பரவல் அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்குத் தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது.
மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று (டிசம்பர் 1) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா , ஸிம்பாப்வே, மொஸாம்பீக், மலாவி உள்ளிட்ட எட்டு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பயணிகள் வரத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 'ஓமிக்ரான்' வகை கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரிட்டன், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பயணத் தடை விதிக்கப்படலாம் என்று திரு கைரி கூறினார்.
அத்துடன், பயணத் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து தடுப்பூசிப் பயணத் தடங்கள் தொடங்கும் திட்டங்களை மலேசியா தற்காலிகமாகத் தள்ளிவைக்கும்.
அந்த நாடுகளிலிருந்து வரும் மலேசிய குடிமக்களும் நீண்டகால அனுமதி பெற்ற மலேசியவாசிகளும், தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் தனிமைக்காப்பில் இருக்கவேண்டும்.
"ஒமிக்ரான் வகை கிருமியைப் பற்றி மேலும் தெரியும் வரை இந்தத் தற்காலிக விதிமுறைகள் நடப்பில் இருக்கும். நிலைமை பாதுகாப்பாக உள்ளது என்று நம்பிக்கை ஏற்பட்டால், தடைகள் நீக்கப்படும்," என்று திரு கைரி கூறினார்.
மலேசியாவில் இதுவரை 'ஒமிக்ரான்' வகை கிருமி கண்டறியப்படவில்லை.
மலேசியாவில் அண்மையில்தான் எல்லைகள் திறக்கப்பட்டன. அத்துடன், மலேசியாவும் சிங்கப்பூரும் சென்ற திங்கட்கிழமை நவம்பர் 29ஆம் தேதி தரைவழி தடுப்பூசிப் பயணத் தடத்தைத் தொடங்கின.