புதிய 'ஓமிக்ரான்' வகை கிருமி, மற்ற வகை கொரோனா கிருமிகளைவிட கொடியது என்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பால் கெல்லி கூறியுள்ளார்.
மாறாக, உண்மை இதற்கு நேர் எதிராக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். பேராசிரியர் கெல்லி குரல்வழிப் பதிவு ஒன்றில் இவ்வாறு கூறினார்.
"பல்வேறு நாடுகளில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு 'ஒமிக்ரான்' தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரிடமும் இலேசான நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளன, அல்லது நோய் அறிகுறிகள் ஏதும் ஏற்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
உலகம் எங்கும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று பேராசிரியர் கெல்லி சொன்னார்.
இருப்பினும், தற்போதைய தடுப்பூசிகள் 'ஓமிக்ரான்' வகை கிருமிக்கு எதிராக செயல்படாது என்பதற்கான சான்றுகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை ஏழு பேருக்கு 'ஓமிக்ரான்' கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளன.