சிட்னி: கொவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர் சமூகத்தில் நேரம் செலவழித்ததை உறுதி செய்த ஆஸ்திரேலிய அதிகாரிகள், மக்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் அவர் சென்று வந்த இடங்களையும் அடையாளம் காணும் பணி துரிதமாக நடைபெறுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர்.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்பே, அதாவது சென்ற வாரம் சிட்னிக்குச் சென்ற அவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதை முதற்கட்ட பரிசோதனை வலுவாக காட்டுவதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அதிகாரிகள் கூறினர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், சிட்னியில் உள்ள கடைத்தொகுதிக்குச் சென்றுள்ளார்.
அவருடன் விமானத்தில் பயணம் செய்த 14 பேரும் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஆறாகிவிடும். ஆனால் சமூகத்தில் நேரம் செலவிட்டது இவர் மட்டுமே.
ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளான மற்ற அனைவருக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே விமானத்தில் பயணம் செய்த மேலும் இரண்டு பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கும் ஓமிக்ரான் வகை தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய அவசர மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஓமிக்ரான் வகை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய ஆஸ்திரேலியாவின் தேசிய அமைச்சரவை நேற்று கூடியது.
முன்னதாக, மாணவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் எல்லையைத் திறந்த ஆஸ்திரேலியா, அதை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் உள்நாட்டு எல்லைகளைத் திறப்பதற்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்
படுத்துமாறு மாநில முதல்வர்
களிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார்.
"நாம் அமைதியாக முடிவுகளை எடுக்கவேண்டும். ஓமிக்ரான் கிருமிப் பரவலால் அச்சமடைய வேண்டாம்," என்று கேன்பராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.
புதிய உருமாறிய தொற்று சமாளிக்கக்கூடிய ஒன்று என்று கூறினார் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கிரேக் ஹண்ட்.