தென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள் இருவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் 'ஓமிக்ரான்' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளது.
அவ்விருவரும் நேற்று புதன்கிழமை சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் சமூகத்துடன் உறவாடவில்லை.
“அவர்களிடமிருந்து சமூக அளவில் கிருமி பரவியதற்கான ஆதாரம் எதுவும் தற்போது இல்லை,” என்று அமைச்சு கூறியது.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் அவ்விருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அவர்களிடம் இருமல் உள்ளிட்ட இலேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவ்விருவரும் நேற்று சிங்கப்பூர் வந்திறங்கினர்.
இங்கு வந்திறங்கியவுடன் அவர்கள் ‘பிசிஆர்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவு வெளிவரும்வரை தனிமைப்படுத்தப்படுவதற்காக அவர்கள் பிரத்தியேக இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டனர்.
கொவிட்-19 தொற்று உறுதியானவுடன், தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 44 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி மற்றும் 41 வயது சிங்கப்பூரர் ஆவர்.
இருவரையும் தொற்றியது ‘ஓமிக்ரான்’ கிருமி வகைதான் என்பதை உறுதிப்படுத்த, தேசிய பொதுச் சுகாதார ஆய்வுக்கூடம் மரபணுப் பரிசோதனை நடத்தி வருகிறது.
இருவருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த மற்ற 19 பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10 நாள்கள் தனிமை உத்தரவு முடிந்தபின் மீண்டும் ‘பிசிஆர்’ பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.