இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 28 பேருக்கு ஓமிக்ரான் வகைக் கிருமி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் 10 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.
இந்த 28 பேரில் 25 பேர் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள். மூவர் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை.
அவர்களுக்கு தொற்றியது ஓமிக்ரானா இல்லையா என்பதைக் கண்டறிய கிருமிப் பரிசோதனை மாதிரிகள் மரபணு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளிவரும்.
மும்பையில் ஓமிக்ரான் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் பத்து பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களில் ஆறு பேருக்கான சோதனைகளில் ‘எஸ்’ மரபணு கண்டறியப்பட்டது.
'எஸ்' மரபணு இருந்தால் அது ஓமிக்ரான் வகைக் கிருமி இல்லை என்று கருதப்படுவதால், இவர்களுக்கு ஓமிக்ரான் இருக்காது என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
மகாராஷ்டிராவில் கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 30ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளுக்குக் கிருமிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அங்கு மொத்தம் 861 பேருக்குக் கிருமிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியா முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த 2,800க்கும் அதிகமான பயணிகளுக்குக் கிருமிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.