சிங்கப்பூரில் புதிதாக 552 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதாக சுகாதார அமைச்சு நேற்று (டிசம்பர் 5) இரவு தெரிவித்தது.
கடந்த சனிக்கிழமை காணப்பட்ட 743 எனும் எண்ணிக்கையைவிட இது குறைவு.
புதிதாக கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.
அத்துடன், மூன்றாவது நபர் ஒருவருக்கு ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியுள்ளது என்று முதற்கட்டப் பரிசோதனைகள் காட்டுவதாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த 37 வயது ஆடவர் டிசம்பர் 1 புதன்கிழமை அன்று தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்.
ஏற்கெனவே ஓமிக்ரான் தொற்றியதாக நம்பப்படும் இரண்டு பேர் பயணம் செய்த அதே விமானத்தில் இவரும் இருந்தார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள அவருக்கு லேசான நோய் அறிகுறிகள் உள்ளன.
அவருக்கு சமூகத்தில் யாருடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் அவரால் சமூகப் பரவல் ஏதும் நிகழவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
அந்த ஆடவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகாரிகள் அவரது மரபணு மாதிரிகளில் மரபணு வரிசைப்படுத்துதலுக்கு அனுப்பியுள்ளனர்.
இவரும் ஓமிக்ரான் தொற்றியதாக நம்பப்படும் மற்ற இருவரும் வந்த விமானத்தில் இருந்த மற்ற 18 பேருக்கும் கிருமிப் பரிசோதனைகளில் தொற்றில்லை என்று தெரியவந்துள்ளது.
அவர்கள் தனிமைக்காப்பில் உள்ளனர்.
இதற்கிடையே சிங்கப்பூரில் மேலும் 13 கொவ்டி-19 தொற்றினால் ஏறப்பட் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மாண்டுவிட்டனர்.
அவர்கள் 52 வயதுக்கும் 96 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அனைவருக்கும் வேறு நோய்கள் இருந்தன.
இவ்வேளையில் வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 0.66 ஆக இருந்தது. இது சனிக்கிழமை காணப்பட்ட 0.63 எனும் விகிதத்தைவிட சற்று அதிகம்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 51.2 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன. இது, சனிக்கிழமை இருந்த 54.3 விழுக்காட்டைவிட குறைவாகும்.
புதிததாக கிருமி தொற்றிய 552 பேரில் 523 பேர் சமூகத்தில் உள்ளவர்கள். 14 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் வசிப்பவர்கள். 15 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.