இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மாண்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (டிசம்பர் 9) நாடாளுமன்றத்தில் அச்சம்பவம் பற்றி அறிக்கை தாக்கல் செய்தபோது இதைத் தெரிவித்தார்.
நேற்றே தொடங்கிய அந்த விசாரணையை இந்திய விமானப் படை முன்னெடுத்து வருவதாக திரு ராஜ்நாத் கூறினார்.
விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரின் பயணத் தகவல் பெட்டி (கருப்புப் பெட்டி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் முன்னர் நடந்தவற்றைப் பற்றி அறிய கருப்புப் பெட்டி உதவும்.
விபத்தில் பலியானவர்களின் நல்லுடல்கள் இன்று மாலை புதுடெல்லிக்கு கொண்டுவரப்படும்.
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று பயிற்சி அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்த வெலிங்டன் ராணுவத் தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
திரு ராவத், அவரது மனைவி மதுலிகா, உயர் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என மொத்தம் 14 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
நேற்று பிற்பகல் 12.15 மணிக்கு வெலிங்டனில் தரையிறங்கிய இருந்த ஹெலிகாப்டர், 12.08 மணிக்கு விபத்துக்குள்ளானது.
அருகில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, ஹெலிகாப்டர் எரிந்துகொண்டிருந்தது.
திரு பிபின் ராவத் ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்டபோது உயிருடன் இருந்ததாக சம்பவத்தைப் பார்த்த சிலர் கூறினர்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் கூறின.
விபத்தில் மாண்ட ராணுவ உயர் அதிகாரிகளின் நல்லுடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.
விபத்தில் உயிர்தப்பிய கேட்பன் வருண் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.