இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், இன்று (டிசம்பர் 8) நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
திரு ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் அந்த விபத்தில் மாண்டுவிட்டனர்.
இந்திய ராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தியது.
விபத்து நடந்தபோது 14 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
உயிர்பிழைத்த கேப்டன் வருண் சிங் என்பவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் அருகே உள்ள குன்னூரில் விபத்து இன்று பிற்பகல் 12.20 மணி அளவில் நிகழ்ந்தது.
திரு ராவத் சூலூர் ஆகாயப்படைத் தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் உரை நிகழ்த்தச் சென்றுகொண்டிருந்தார்.
குன்னூருக்கு ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டேரி எனும் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
கடும் மூடுபனி படர்ந்திருந்ததால் தெளிவாகத் தெரியாமல் போயிருக்கலாம் என்றும் அதுவே விபத்து நேரக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்திய அதிபர் ராம் நாத் கோவிந். தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் திரு ராவத், திருமதி ராவத், மற்ற 11 பேர் ஆகியோரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.