ஏற்கெனவே கொவிட்-19 தொற்றியோரையும் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டோரையும் உருமாறிய 'ஓமிக்ரான்' கிருமி மீண்டும் எளிதில் தொற்றவல்லது என்று முதற்கட்டத் தரவுகள் கூறுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயினும், அது உருமாறிய 'டெல்டா' கிருமியைவிட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்குச் சில சான்றுகள் கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கூறி இருக்கிறார்.
அதே வேளையில், முந்திய திரிபுகளைவிட அபாயம் குறைந்தது என்றாலும் வேகமாகப் பரவக்கூடியது என்பதால் அதிகமானோரைப் பாதித்து, சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புமீது நெருக்கடியை ஏற்படுத்தி, அதனால் பலர் இறக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், முதல் இரு தவணைகளின்போதும் ஒரே நிறுவனத்தின் தடுப்பூசியைப் போடுவதே சிறந்தது என்று உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவக் குழு ஒன்று தெரிவித்து இருக்கிறது. தடுப்பூசி விநியோகத்தில் பிரச்சினையை எதிர்கொண்டுவரும் நாடுகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்த அது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பரவும் வேகம் நான்கு மடங்கு அதிகம்
இதனிடையே, டெல்டா கிருமியை ஒப்புநோக்க, ஓமிக்ரான் கிருமி அதன் தொடக்க கட்டத்தில் 4.2 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என்று ஐப்பானிய ஆய்வு ஒன்று கூறுகிறது. "ஓமிக்ரான், இயற்கையாகவும் தடுப்பூசி மூலம் பெறும் நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு எளிதில் கட்டுப்படாது," என்று ஜப்பானிய சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கிவரும் பேராசிரியர் டாக்டர் ஹிரோஷி நிஷியுரா கூறியிருக்கிறார்.