சர்க்கிள் லைன் எனப்படும் வட்டப் பாதை எம்ஆர்டி விரிவாக்கத்திற்கான சுரங்கப் பணிகள் நேற்றுக் காலை நிறைவுற்றன. அந்த 4 கிலோமீட்டர் விரிவாக்கத்தில் அமையும் மூன்று எம்ஆர்டி நிலையங்களில் ஒன்றான கேன்டோன் மன்ட் நிலையத்துடன் சுரங்கவழி இணைந்தது 55 விழுக்காட்டு பணிகள் நிறைவுற்றதைக் குறிக்கிறது.
இந்தப் பணிகள் 2019ஆம் ஆண்டு தொடங்கின. இதனுடன் வட்டப்பாதைச் சுற்று முடிவடைகிறது. ஹார்பர்ஃபிரன்ட் முதல் மரினா பே வரையிலான விரிவாக்க ரயில் பாதையை 2026ஆம் ஆண்டு திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகளுக்கு நேரம் மிச்சப்படும்.
உதாரணமாக, தெலுக் பிளாங்காவிலிருந்து மரினா பேக்கு நேரடியாகப் பயணம் செய்வதன் மூலம் பத்து நிமிடங்களை அவர்கள் மிச்சப் படுத்தலாம்.
விரிவாக்கத்துடன் சேர்த்து வட்டப் பாதையில் 33 எம்ஆர்டி நிலையங்கள் இருக்கும். இதன் தூரம் சுமார் 40 கிலோமீட்டர். இதனுள், வெவ்வேறு ரயில் பாதைகள் இணையும் 12 சந்திப்பு நிலையங்களும் அமையும். கேன்டோன் மன்ட் நிலையத்தோடு பிரின்ஸ் எட்வர்ட் ரோடு, கெப்பல் ஆகிய நிலையங்களும் வட்டப் பாதை விரிவாக்கத்தில் இடம்பெறும். சுரங்கப் பணி
களின் நிறைவு நிகழ்வில் நேற்று பங்கேற்றுப் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இந்த நிகழ்வு எம்ஆர்டி விரிவாக்கத் திட்டத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் என்றார்.
ஒட்டுமொத்த எம்ஆர்டி முறையில் மாபெரும் மீள்திறனைத் தரக்கூடிய இந்த விரிவாக்கம் பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட்டப்பாதையில் 12 ரயில் நிலைய சந்திப்புகள் இருப்பதால் ரயில் பயணத்தில் தடங்கல் ஏற்படும் போது மாற்றுப் பயணத்திற்கு அதிகத் தெரிவுகள் பயணிகளுக்கு இருக்கும் என்றார் திரு ஈஸ்வரன்.