பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தில் வழக்கம் போல மூன்று பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிடப்பட்டது.
தைத் திருநாளை வரவேற்று வழிபட பலர் குடும்பம் குடும்பமாக அங்கு வந்திருந்தனர்.
பொறியியளாளராகப் பணிபுரியும் திரு சரவணகுமார், 43, நிறுவன செயலாளராகப் பணிபுரியும் திருமதி ரூபா, 40, தம்பதியினர் தைப் பொங்கலை எப்போதும் விமரிசையாகக் கொண்டாடுவர்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் அவர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருந்தனர்.
தொடக்கநிலை 4ல் பயிலும் மகள் அனன்யாவும் பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார்.
காலையில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து வீட்டில் வழிபாடுகளை முடித்த பின்னர் உயர்நிலை 3ல் பயிலும் அனிஷ்ராஜ் பள்ளிக்குக் கிளம்பி, மற்ற மூவரும் கோயிலுக்குச் சென்றனர்.
மாமியார் காலமாகி ஓராண்டு ஆகாததால், இந்த ஆண்டு புத்தாடை, விருந்து என்று இல்லாமல் எளிமையாகப் பொங்கல் கொண்டாட உள்ளதாக திருமதி ரூபா கூறினார்.
"தை முதல் நாளில் புது நகை வாங்குவது வழக்கம், பிற்பகல் கடைக்குப் போய் நகை வாங்கி, கடையில் சாப்பிட்ட வருவோம்," என்றார்.
சுங்கை காடோட்டில் உள்ள ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்துக்கு அதிகாலையில் வந்திருந்தனர் ஆதப்பராஜன்-ரணிதாதேவி, மற்றும் தேவேந்திரன்- சியாமளா தம்பதிகள். அவர்கள் கைகளில் ஆதப்பராஜன், ரணிதாதேவியின் பிள்ளைகளான கிரிஷன், கவிநயா எனும் மழலைகள். இதுவரை வீட்டிலேயே பொங்கல் வைத்துதான் கொண்டாடியிருக்கிறோம். இதுவரை நாங்கள் பொங்கல் நாள் அன்று கோவிலுக்குச் சென்றதில்லை என்றனர் இந்த இரண்டு தம்பதிகள். "இந்த ஆண்டு கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று நினைத்து அனைவரும் விடுப்பு எடுத்தோம். தாதியாக வேலை செய்யும் எனக்கு விடுப்பு கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. இந்தக் காலைப் பொழுதில் நிறைவான கொண்டாட்டமும் வழிபாடும் அமைந்தன," என்றார் ரணிதாதேவி.