இரண்டாம் உலகப் போரின்போது காணாமல்போன விமானத்தின் உடைந்த பாகங்கள் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1945ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் தென்சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து 13 பேருடன் அந்த சி-46 விமானம் புறப்பட்டுச் சென்றது. ஆயினும், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்குமேல் பறந்தபோது, மோசமான வானிலை காரணமாக விமானம் மாயமானது.
"அதன்பின் விமானம் குறித்து எந்தத் தகவலும் இல்லை," என்றார் தேடுதல் நடவடிக்கையைத் தலைமையேற்று நடத்திய அமெரிக்கர் கிளேட்டன் குலஸ்.
விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகனான திரு பில் ஷெரர் கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் இந்தத் தேடுதல் முயற்சியைத் தொடங்கினார்.
தேடுதல் பயணம் பல மாதங்கள் நீடித்தது. உள்ளூரின் லிசு இனத்தைச் சேர்ந்த சுற்றுப்பயண வழிகாட்டிகளின் துணையுடன் மார்பு உயரத்திற்கு நீர் ஓடிய ஆறுகளைக் கடந்தும் உயரமான மலைப்பகுதியில் உறைவெப்பநிலையில் முகாமிட்டும் தேடுதல் பணி தொடர்ந்தது.
இந்த முயற்சியின் தொடக்கத்திலேயே உடல்வெப்பநிலை மிகவும் குறைந்து, பயண வழிகாட்டிகள் மூவர் மாண்டுபோயினர்.
இருப்பினும், தங்களின் விடாமுயற்சியால் பனி மூடிய மலைமுகட்டில் விமானத்தின் உடைந்த பாகங்களை அக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
விமானத்தின் வால் பகுதியில் இருந்த எண்ணைக் கொண்டு அவர்கள் அதனை அடையாளம் கண்டனர்.
"துயரத்திற்கு இடையில் இது மகிழ்ச்சியான செய்தி," என்றார் தந்தையைப் பறிகொடுத்த திரு ஷெரர்.
தந்தையின்றித் தாம் வளர்ந்ததாகக் கூறிய திரு ஷெரர், தாம் 13 மாதக் குழந்தையாக இருந்தபோது, தம் தந்தை மாயமான செய்தி குறித்து தம் தாயாருக்கு தந்தி கிடைத்ததை நினைவுகூர்ந்தார்.