கால்வாயில் இறந்து கிடந்த இரட்டைச் சகோதரர்கள் வழக்கு தொடர்பில் இன்று அவர்களின் தந்தை மீது கொலைக் குற்றம் சாட்டப்படஉள்ளது. அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றின் அருகிலுள்ள கால்வாயில் 11 வயது இரட்டையர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டன.
அதையடுத்து, மகன்களின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 48 வயதுடைய சிறுவர்களின் தந்தை நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த சிறுவர்களான ஈத்தன் யாப், ஏஷ்டன் யாப் இருவரும், சிறப்புத் தேவை உள்ளவர்கள் என்று அறியப்படுகிறது.
அவர்கள் எங் கோங் வட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்ததாகவும் நம்பப்படுகிறது.
இதற்கிடையே, சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட கால்வாய் அருகே, நேற்று பல சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்து சமயத்தைச் சேர்ந்த பூசாரிகள், பெளத்த பிக்கு, கிறிஸ்துவ பாதிரியார் உள்ளிட்டவர்கள் தத்தம் சமய முறைப்படி உயிரிழந்த சகோதரர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்தனர்.
பிரார்த்தனை நடந்த இடத்தில் வெள்ளை ரோஜாக்களும் பூங்கொத்துகளும் மெழுகுவத்திகளும் வைக்கப்பட்டன. ஹாலந்து புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன், வட்டாரவாசிகள் என சுமார் 20 பேர் அவ்விடத்தில் கூடினர்.
"தனிப்பட்ட முறையில் அவர்களை நாம் அறிந்திராதபோதும் அவர்களின் அகால மரணம் நமக்கு, குறிப்பாக நம்மிடையே உள்ள பெற்றோர்களுக்கு, பெரும்வேதனையை அளிக்கிறது.
"இது நினைத்துப் பார்க்க முடியாத ஓர் இழப்பு," என்றார் திருவாட்டி சிம் ஆன். இந்நிலையில் அக்கம்பக்கத் தொண்டூழியர்களுடன் கலந்தாலோசித்து இந்த அனைத்து சமய பிரார்த்தனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிரீன்ரிட்ஜ் கிரசெண்டில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 6.25 மணியளவில் உதவி கோரி ஆடவர் ஒருவர் தங்களுடன் தொடர்புகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், கால்வாயில் அசைவின்றி கிடந்த இரட்டையர்களின் உடல்களைக் கண்டதை அடுத்து விசாரணையில் மும்முரமாக இறங்கினர். விசாரணை முடிவில் சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டார். அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.