2020ஆம் ஆண்டு ஜூலையில் சமூக ஊடகத்தில் செய்தி படித்துக்கொண்டிருந்தார் திரு சக்திபாலன் பாலதண்டாயுதம். அப்போது, தங்களுடைய ஒரு வயது குழந்தைக்கு கல்லீரலைத் தானம் செய்ய யாராவது முன்வர முடியுமா என்று அதன் பெற்றோர் முறையிட்டிருந்த பதிவு ஒன்று திரு சக்திபாலனின் கவனத்துக்கு வந்தது.
அன்றைய தினம் பின்னிரவு 1 மணியளவில் அக்குழந்தையின் பெற்றோரைத் தொடர்புகொள்ளும்போதே, தம்முடைய கல்லீரலின் ஒரு பகுதியை அக்குழந்தைக்கு தானம் வழங்க திரு சக்திபாலன் உறுதிபூண்டார்.
பல்வேறு சுற்று பரிசோதனைகளுக்குப் பிறகு, தம்முடைய கல்லீரலின் 23 விழுக்காட்டை குழந்தை ரேயாவுக்கு அதே ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தானம் வழங்கினார் இவர்.
தம்முடைய தன்னலமற்ற செயலுக்காகவும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரர்’ எனும் விருதை புதன்கிழமை (பிப்ரவரி 9) திரு சக்திபாலன் வென்றார்.
அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து இந்த விருதை இவர் பெற்றுக்கொண்டார்.
2019ல் பிறந்த ஒரு சில வாரங்களில் ரேயாவுக்கு biliary atresia எனக் கல்லீரலைப் பாதிக்கும் அரியவகை நோய் கண்டறியப்பட்டது.
இந்த நோய் இருப்போருக்கு, கல்லீரலில் சுரக்கும் பித்தநீரை பித்தப்பைக்குக் கொண்டுசெல்லும் நாளம் அழன்று இருக்கும்.
பித்தநீர், பித்தப்பைக்குச் செல்வது தடைபடுகிறது. இதனால் கல்லீரல் செயல் இழந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.
கல்லீரல் தானம் செய்த பிறகு குழந்தை ரேயா மற்றும் அதன் பெற்றோருடன் திரு சக்திபாலன் வலுவான பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
உறுப்பு தானத்தை ஆதரித்துவரும் இவர், உதவி தேவைப்படுவோருக்கு உதவ கூடுதலானோர் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறார்.
தாம் உதவ முன்வந்தது குறித்து பேசிய திரு சக்திபாலன், 28, “கல்லீரல் தானம் செய்யும் ஒருவரைத் தேடி குழந்தையின் பெற்றோர் இருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்வந்து உதவுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக நான் கருதினேன்,” என்றார்.