ரஷ்ய அதிபர் விளாடமிர் புட்டின் உக்ரேன் மீது படையெடுக்க இறுதி முடிவை எடுத்துவிட்டதை உறுதிப்படுத்தும் உளவுத் துறைத் தகவல்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அரசதந்திர ரீதியாகத் தீர்வுகாணும் முயற்சிகளை நிராகரித்து திரு புட்டின் உக்ரேன் மீது படையெடுக்கப்போவதாகத் திரு பைடன் கூறியுள்ளார்.
அவ்வாறு நிகழ்ந்தால் மிகவும் மோசமான விளைவுகளைத் தரும் தேவையற்ற ஒரு போர் கிழக்கு ஐரோப்பாவில் மூளும் என்று திரு பைடன் சொன்னார். 2.8 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரேனின் தலைநகர் கீவை ரஷ்யா குறிவைக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது.
நேற்று பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை ரஷ்யா மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 190,000 ரஷ்ய துருப்புகள் உள்ளிட்ட படைகள் உக்ரேனின் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவேளை ரஷ்யா படையெடுத்தால் அதைச் சமாளிக்க தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக உக்ரேனில் செயல்படும் பெரிய அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் கூறின. ஆகக் கடைசி நிலவரப்படி இந்நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இடம்மாற்றவில்லை.
உக்ரேனில் நிலவும் பதற்றநிலை, பனிப்போருக்குப் பிறகு ஐரோப்பா சந்திக்கும் ஆகப் பெரிய பாதுகாப்பு சவால் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் குறிப்பிட்டார்.
நாடுகளுக்கிடையிலான அரசியல் ரீதியான பெரிய பூசலில் உக்ரேன் விவகாரம் ஓர் அங்கம் என்றும் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இருந்த டாக்டர் இங் சுட்டினார்.
போர் மூளும் அபாயத்தையொட்டி கிழக்கு உக்ரேனில் இருக்கும் டொனியெட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய நகரங்களில் குடியிருப்பாளர்களை ரஷ்யாவிற்கு வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்பகுதிகள் ரஷ்யாவுக்குச் சாதகமான கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளன.
உக்ரேன் மீது படையெடுப்பதில் உள்ள அபாயங்கள் அதிகம். அதனால் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரஷ்யா படைகளை நிறுத்தி வைத்திருப்பது பொய்யான ஒரு நிலையைச் சித்திரிப்பதாக மாஸ்கோவில் கவனிப்பாளர்கள் பலர் கூறுகின்றனர்.
அதைக் கருத்தில்கொள்ளும்போது திரு புட்டின் நிலைமைக்கு ஏற்றவாறு சரியான முடிவைத்தான் எடுப்பார் என்பதும் அவர்களின் கருத்து.
எனினும், கொள்ளைநோய் பரவல் காலத்தில் திரு புட்டினின் அடிப்படைக் கொள்கைகள் மாறியுள்ளது என்று வேறு சிலர் கருதுகின்றனர். மாற்றத்திற்குப் பிறகு அவருக்குக் கூடுதல் பயம் வந்திருக்கலாம் என்றும் வருத்தம் கொண்டு தாறுமாறாக நடந்துகொள்ளும் ஆற்றலும் அவரிடம் அதிகரித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கப்போவதாகச் சொல்லப்பட்டு வருவதை மாஸ்கோ இதுவரை மறுத்து வந்துள்ளது.