சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது வரையுள்ள 10 சிறுவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
ஜனவரி 31ஆம் தேதி வரையிலான தடுப்பூசிகளின் பாதுகாப்பு பற்றி ஆக அண்மைய விவரங்களை புதன்கிழமை (பிப்ரவரி 23) அளித்த சுகாதார அறிவியல் ஆணையம் இதைத் தெரிவித்தது.
சிறுவர்களுக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என்பதை ஆணையம் முதன்முறையாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வலிப்பு, குடல்வால் (அப்பென்டிக்ஸ்) வலி, ரத்த அழுத்தம் குறைதல், ஒவ்வாமை, சிறுநீரகச் செயல்பாட்டில் கோளாறு, சிறிய ரத்த நாளங்கள் வீக்கமடைதல் உள்ளிட்டவை கடுமையான பக்க விளைவுகளாகக் கருதப்படுகின்றன.
இங்குள்ள சிறுவர்கள் யாருக்கும் தடுப்பூசிக்குப் பின்னர் சில நேரங்களில் இதயத்தில் ஏற்படக்கூடிய இருவகை அழற்சி ஏற்படவில்லை என்றும் ஆணையம் கூறியது.
இந்நிலையில், 5 முதல் 11 வயது வரையிலான 280 சிறுவர்களுக்கு சாதாரண பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
அமைச்சின் முந்தைய அறிக்கையில் ஆறு சிறுவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முகவீக்கம், காய்ச்சல், லேசான நெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட சாதாரண பக்கவிளைவுகள் சிறுவர்களுக்கு ஏற்பட்டன.
பதின்ம வயது இளையர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும் அதே அளவில்தான் சிறுவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
சிங்கப்பூர், 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.
இந்த வயதுப் பிரிவினருக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை, 238,253 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கூடுதல் தடுப்பூசி பற்றியும் ஆணையம் மேல்விவரம் அளித்தது.
இங்கு 3.19 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை அடுத்து பக்கவிளைவுகள் அதிகரிக்கவில்லை என்று ஆணையம் கூறியது.
ஃபைசர் தடுப்பூசியை கூடுதல் தடுப்பூசியாகப் போட்டுக்கொண்ட 553 பேருக்கும் மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 289 பேருக்கும் லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
73 பேருக்குக் கடும் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அவர்களில் 15 பேருக்கு இதயத் தசையிலும் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்விலும் அழற்சி உண்டானது.