சீனா எங்கும் கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் தங்கள் வீடுகளில் முடக்கநிலையில் உள்ளனர்.
அங்கு அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால், சீனா குறைந்தது 13 நகரங்களில் முழு முடக்கநிலையை அறிவித்துள்ளது.
மேலும் பல நகரங்களில் கடும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள குடியிருப்பாளர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகளை சீனா தற்போது செய்து வருகிறது.
சீனாவில் 5,280 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) அன்று கூறப்பட்டது.
தொடர்ந்து ஆறாவது நாளாக சீனாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்று புதிதாக கிருமி தொற்றியவர்களில் சுமார் 3,000 பேர் வடகிழக்கில் உள்ள ஜீலின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜீலின் மாநிலம் முழுவதும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் 24 மில்லியன் பேரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படும் ஷென்ஸென் நகரத்தில் மூன்று நாள்களுக்கு முன்னர் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.
ஷாங்ஹாயிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சீனாவின் ஆக உயரமான கட்டடமான ஷாங்ஹாய் டவர் கட்டடத்தில் தொற்றுப் பரவல் காரணமாக திங்கள் அன்று மூடப்பட்டது.
சீனா கொவிட்-19 தொற்றை அறவே அனுமதிக்காத அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது. இதனால் தொற்று ஏற்படும் இடங்களில் சீனா கடும் முடக்கநிலையை நடைமுறைப் படுத்துகிறது.
கொவிட்-19 தொற்று பரவும் இடங்களை சீனா தொடர்ந்து முடக்கி வந்தால், அதன் உள்நாட்டுப் பொருளியல் உற்பத்தியில் பாதியளவு பாதிக்கப்படும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.