செந்தோசாவின் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, மூன்று புதிய மரபுடைமைப் பாதைகள் வருகையாளர்களுக்கு உதவவுள்ளன.
தேசிய மரபுடைமைக் கழகமும் செந்தோசா தீவு மேம்பாட்டு கூட்டுநிறுவனமும் இப்பாதைகளை இணைந்து அமைத்துள்ளன.
செந்தோசா தீவு, சுற்றுப்பயணிகளின் உல்லாசத் தலம் மட்டுமன்று. அது சிங்கப்பூரின் மரபுடைமையை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு தலமும் கூட.
செந்தோசாவின் ஒவ்வொரு பரிமாணத்தையும் ஒவ்வொரு பாதையும் எடுத்துரைக்கும்.
‘கம்போங், ராணுவ பயிற்சியிடப்’ பாதை, செந்தோசா மீன்பிடி கிராமமாக இருந்த காலத்துக்கு விருந்தினர்களை அழைத்துச் செல்லும்.
முன்னாளில் புலாவ் பிளாக்காங் மத்தி என்று அழைக்கப்பட்ட செந்தோசாவில் ஓராங் லாவுட் பழங்குடியினர் வசித்து வந்தனர்.
அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றி முதல் பாதையானது எடுத்துக்கூறும்.
‘அரண்கள்’ பாதை, பழைய சிங்கப்பூரின் தற்காப்புக் கட்டமைப்பையும் ராணுவ வரலாற்றின் சுவடுகளையும் காட்டும்.
கடைசி பாதையயான ‘செந்தோசாவின் நினைவுகள்’, முற்காலத்திலும், தற்காலத்திலும் இருந்துவரும் உல்லாசத் தலங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
இம்மூன்று பாதைகள், செந்தோசாவில் உள்ள 30 மரபுடைமை இடங்களுக்கு வருகையாளர்களை அழைத்துச் செல்லும்.
புகழ்பெற்ற ஃபோர்ட் சிலோசோ, கேபிள் கார், கண்ணைக் கவரும் சிலோசோ கடற்கரை ஆகியவையும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாண்டின் இறுதிக்குள் மேலும் இரு மரபுடைமைப் பாதைகளைத் தேசிய மரபுடைமைக் கழகம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த செய்தி பற்றிய மேல்விவரத்தை தமிழ் முரசின் மார்ச் 18 வெள்ளிக்கிழமை அச்சுப் பிரதியில் படிக்கலாம்.