கொவிட்-19 தொற்றுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு இருக்கும் முதியோருக்கு மொடர்னா பூஸ்டர் தடுப்பூசி சிறந்த பாதுகாப்பைக் கொடுக்கிறது என்று தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 60 வயதுள்ளவர்கள், மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்கு ஏழு நாள் கழித்து அவர்களின் உடலில் சராசரியாக இரண்டு மடங்கு அதிக கிருமி எதிர்ப்பு ஆற்றல் உருவாகி இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இது கொவிட்-19 உருமாறிய கிருமித்தொற்று அனைத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது என்று அந்த நிலையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதர அனைத்துலக பரிசோதனை முடிவுகளும் இதனை ஒத்து இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. பூஸ்டர் தடுப்பூசி மூலம் கொவிட்-19க்கு எதிரான நோய் தடுப்பாற்றல் எந்த அளவுக்கு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான உள்ளூர் தகவல் வளத்தைப் பலப்படுத்துவது இந்த ஆய்வின் நோக்கம் என்று இந்த நிலையத்தில் செயல்படும் சிங்கப்பூர் தொற்றுநோய் மருந்தக ஆய்வுக் கட்டமைப்பின் தலைவர் டாக்டர் பர்னாபே யோங் தெரிவித்தார். கொவிட்-19 கிருமி தொடர்ந்து உருமாறுகிறது. இதனால் அவை நோய் தடுப்பாற்றலில் இருந்து தப்பித்து விடுகின்றன. இது கவலை தருகிறது.
நீண்டகாலப் போக்கில் கொவிட்-19க்கு எதிரான நோய் தடுப்பாற்றல் உத்தி அவசியம் என்பதை இந்த நிலவரம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று அவர் கூறினார்.
இந்த நிலையம் சென்ற ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை ஃபைசர் தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொண்ட 100 பேரை உள்ளடக்கி ஆய்வு நடத்தியது. அவர்களில் பாதிப்பேருக்கு வயது 60க்கும் மேல்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு 28 நாள்கள் கழித்தும் மொடர்னா பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொண்ட முதியவர்களில் நோய் எதிர்ப்பாற்றல் 1.5 மடங்கு அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது.
இருந்தாலும் இளம் வயதுள்ளவர்களைப் பொறுத்தவரை நோய் எதிர்ப்பாற்றல் இந்த இரண்டு தடுப்பூசிகளின் ஆற்றலை ஒத்தே இருந்தது. முதியவர்களைப் பொறுத்தவரை, மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் சிறந்த அல்லது நீண்டகால பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று டாக்டர் யோங் குறிப்பிட்டார்.
ஆய்வில் கலந்துகொண்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி எந்த அளவுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது என்பதை முடிவு செய்ய அவர்களிடம் ரத்த பரிசோதனைகளை ஆய்வாளர்கள் தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.