சிங்கப்பூரில் இனி குழுக்களாக ஒன்றுகூடுவதற்கு எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் இருக்காது.
அதனுடன், அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) முதல் எல்லா ஊழியர்களுக்கும் வேலையிடங்களுக்குத் திரும்ப முடியும்.
எஞ்சியுள்ள தனது கொவிட்-19 கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் மேலும் வெகுவாகத் தளர்த்த உள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இதை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) அன்று அறிவித்தது.
வரும் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 26 அன்று இந்த தளர்வுகள் நடப்புக்கு வரும்.
இன்று அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுத் தளர்வுகளில் மேலும் சில:
- வரும் செவ்வாய் அன்று சிங்கப்பூர் டொர்ஸ்கொன் அளவு ஆரஞ்சு நிறத்திலிருந்து மஞ்சளுக்குக் குறைக்கப்படும். டொர்ஸ்கோன் எனப்படும் தேசிய அளவிலான நோய்ப் பரவல் விழிப்புநிலை எச்சரிக்கை இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக குறைக்கப்படுகிறது.
- வரும் செவ்வாய் முதல், பெரும்பாலான இடங்களில் நுழைய, சேஃப்என்ட்ரி முறையையும் ட்ரேஸ்டுகேதர் செயலியையும் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் அரசாங்கம் கூறியது. பெரிய நிகழ்ச்சிகள், உணவுபானக் கடைகள், இரவுநேரக் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட தொற்று அபாயம் அதிகமுள்ள இடங்களில்தான் டிரேஸ்டுகேதர் தொடர்ந்து தேவைப்படும்.
- முகக் கவசம் அணியாத நடவடிக்கைகளில் பத்து பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று விதிமுறை அகற்றப்படும்.
- ஒரு வீட்டுக்கு ஒரே நேரத்தில் பத்து பேர் மட்டும்தான் செல்ல முடியும் என்ணு விதிமுறையும் நீக்கப்படும்.
- பாதுகாப்பு இடைவெளியைக் கடைபிடிக்கவும் இனி தேவை இல்லை.
இருப்பினும் ஏதாவது அபாயத்தை எதிர்கொள்ள சிங்கப்பூர் மக்கள் விழிப்புடனும் தயாராகவும் இருக்கும்படி அமைச்சுகள்நிலைப் பணிக்குழு வலியுறுத்தியது.
கொவிட்-19 கிருமிப்பரவல் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்றும் அது வலியுறுத்தியது.