எளிமையாக சீரமைக்க கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடப்புக்கு வந்தன. கடைத்தொகுதிகள், பேரங்காடிகளில் ஒரு மீட்டர் தூர இடைவெளி கட்டாயமில்லை.
எனினும் சில பேரங்காடிகளும் கடைகளும் எச்சரிக்கை உணர்வுடன் கட்டுப்பாடுகளைத் தொடர்கின்றன.
என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் உள்ளிட்ட சில இடங்களில் தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான கட்டங்கள் இன்னும் உள்ளன.
“பாதுகாப்பான சமூக நடைமுறைகளை ஊக்குவிக்க, தற்போதுள்ள பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை ஃபேர்பிரைஸ் தொடர்கிறது,” என்று ஃபேர்பிரைசின் செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மாறிக்கொண்டே இருக்கும் நிலைமையை ஃபேர்பிரைஸ் கண்காணித்து வரும் என்றும் அவர் சொன்னார்.
மளிகைப் பொருள்கள் வாங்குதல், வழிபாடுகளில் கலந்துகொள்வது, பூங்காக்களுக்குச் செல்வது போன்ற முகக்கவசம் அணிய வேண்டிய நடவடிக்கைகளின் பாதுகாப்பான தூர இடைவெளி ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் கட்டாயமில்லை.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள கூரையுள்ள பகுதிகள், போன்ற பூங்காக்களில் உள்ள பொது இடங்களில் உள்ள பாதுகாப்பு இடைவெளிக் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளன. பீஷான், காத்தோங்கிலுள்ள சில பொது இடங்களிலும் பாது காப்பு தூர இடைவெளி நடப்பில் உள்ளது.
தேசிய பூங்காக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் முகாமிடும் தளங்கள், இறைச்சி வாட்டும் (பார்பிகியூ) இடங்களும் தேவையைப் பொறுத்து வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படும் என்று பூங்காக் கழகத்தின் பூங்காத் துறை குழு இயக்குநரான திரு சியா செங் ஜியாங் கூறினார்.
லிட்டில் இந்தியாவில் பல உணவங்காடிகளிலும் நேற்று முதல் ஒரு மீட்டர் தூர இடைவெளிக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.
தேக்கா சந்தை அருகேயுள்ள கமலா உணவகத்திலும் பஃப்ளோ சாலையிலுள்ள மதுராஸ் விலாஸ் உணவகத்திலும் மேசைகளிலும் இருக்கைகளிலும் பாதுகாப்பு இடைவெளி அடையாள ஒட்டுத் தாள்கள் நீக்கப்பட்டுள்ளன.
தேக்கா நிலைய உணவங்காடிக் கடைகளில் உள்ள இருக்கைகளும் மேசைகளும் பிளாஸ்டிக் தடுப்புகளால் மூடப்பட்டிருக்கின்றன. எனினும், பாதுகாப்பு இடைவெளி அடையாளத்துக்காக ஒட்டப்பட்ட ஒட்டுத்தாள்களின் மேலேயே மக்கள் அமர்ந்திருந்தனர்.
தேக்கா நிலையம், லிட்டில் இந்தியா ஆர்க்கெட் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் தடுப்புகள் இன்னும் உள்ளன.
‘சேஃப்எண்ட்ரி’ பதிவும் உள்ளது.
வியாழன் முதல் பள்ளிவாசல்களில் பாதுகாப்பான தூர இடைவெளிக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்காது என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) திங்களன்று தெரிவித்தது.
மாற்றங்களின் கீழ், உணவகங்களில் உணவு, பானம் உண்ணாதபோது முகக் கவசம் அணிவது கட்டாயம். முகக்கவசம் அணியாத சூழல்களில் பாதுகாப்பு இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியவேண்டிய சூழல்களில் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இனிமேல் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் வீடுகளுக்கு ஐந்து விருந்தினர் வரை செல்ல முடியும்.
நிகழ்ச்சி வகைக்கு ஏற்ப இல்லாது, இடத்துக்கு ஏற்ப அதிகபட்ச நபர் வரம்பு கடைப்பிடிக்கப்படும். கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் வெளி இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
கூடுதல் செய்தி:
மாதங்கி இளங்கோவன்