மலேசிய சுகாதார அமைச்சர் நம்பிக்கை
மலேசியாவில் கோழி இறைச்சி விலை குறைந்து, சிங்கப்பூருக்கு அதன் ஏற்றுமதி விரைவில் தொடரும் எனத் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். கோழி ஏற்றுமதித் தடை ஒரு சில மாதங்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியம் குறைவு என அவர் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூருடனான இருதரப்பு உறவை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு எளிதான ஒன்றல்ல. எனவே, உள்நாட்டில் விலை நிலவரம் சீராகும்வரை இந்த ஏற்றுமதித் தடை தற்காலிகமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்," என்றார் அமைச்சர் கைரி.
நேற்று முன்தினம் கோழி ஏற்றுமதித் தடை நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சி விலை ஏறியுள்ளது. சிங்கப்பூர் அதன் கோழி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது.
விநியோகச் சங்கிலி விவகாரங்கள், கோழித் தீவனத்தைக் கொள்முதல் செய்வதைச் சிரமமாக்கிவிட்டதாக திரு கைரி கூறினார்.
பருவநிலை மாற்றத்தால் கோழிகள் வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலேசியாவுக்கு இது மிகவும் சிரமமான சூழ்நிலைக்கு வித்திட்டுள்ளதாகச் சொன்னார்.
"உள்நாட்டு உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதில் பொதுவாக நாடுகள் கவனம் செலுத்தினாலும், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாளராக எங்களுக்கு இருக்கும் பொறுப்பை நாங்கள் நன்றாகவே உணர்கிறோம்," என்றார் அவர்.
ஏற்கெனவே நிலவரம் மேம்பட்டு வருவதாகத் தெரிவித்த திரு கைரி, குறைந்த விலையுடைய மாற்று கோழித் தீவன உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதற்கிடையே, மலேசியாவில் கோழி இறைச்சி, முட்டைகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் ஜூலைக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி நேற்று கூறினார். தேவை, உற்பத்தியைப் பொறுத்து அவற்றின் விலைகள் தீர்மானிக்கப்படும் என்றார் அவர். மாறாக, வசதி குறைந்தோருக்குப் பண உதவி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.