மலேசியாவின் துணை மாமன்னரும் பேராக் சுல்தானுமான சுல்தான் நஸ்ரின் ஷா, பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்திருக்கிறார். நாளை வரை இங்கு இருக்கும் அவர் சிங்கப்பூர் தலைவர்களைச் சந்திப்பார் என வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சுல்தான் நஸ்ரின், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பேராக் இஸ்லாமிய சமய, மலாய் பாரம்பரிய மன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகம்மது அன்வார் சைனி ஆகியோருடன் பிரதமர் திரு லீ உரையாடினார்.
அந்த உரையாடலைக் காட்டும் படத்தை நேற்று ஃபேஸ்புக்கில் திரு லீ பதிவிட்டார்.
மலேசியாவின் துணை மாமன்னரும் பேராக் சுல்தானுமான நஸ்ரின் ஷாவுடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதாகவும் அவருடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டதாகவும் திரு லீ ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். இதற்கு முன் சுல்தான் நஸ்ரின் 2019ல் சிங்கப்பூர் வந்தபோது அவரைத் தான் சந்தித்ததை திரு லீ நினைவுகூர்ந்தார்.
எல்லைகள் திறக்கப்பட்டு இருப்பதால் இப்போது நேருக்குநேர் சந்திக்க முடிந்தது பற்றி தான் மகிழ்வதாகவும் திரு லீ தெரிவித்தார். வட்டார நிலவரங்கள் பற்றியும் சிங்கப்பூரும் பேராக் மாநிலமும் ஒத்துழைப்பைப் பலப்படுத்தக்கூடிய துறைகள் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக திரு லீ குறிப்பிட்டார்.
பேராக் உட்பட மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வலுவான உறவை பலப்படுத்த தான் விரும்புவதாகவும் திரு லீ தமது செய்தியில் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூர் வந்துள்ள சுல்தானுக்கு சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030 பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது.