உக்ரேனில் உண்மையிலேயே அணுஆயுதப் பேரிடர் ஆபத்து தலைதூக்கு வதாக ஐநா அணுசக்தி ஆணையம் அபாயச் சங்கு ஊதி உள்ளது.
ஐரோப்பாவின் ஆகப் பெரிய அணுசக்தி ஆலை உக்ரேனில் அமைந்து இருக்கிறது. அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அந்த ஆலையை, ரஷ்யப் படைகள் தாக்குவதாக உக்ரேன் புகார் தெரிவித்தது.
ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியது உக்ரேன்தான் என்று மாஸ்கோ பதிலடி கொடுத்தது.
அந்தத் தாக்குதல், உக்ரேனில் உண்மையிலேயே அணு ஆயுதப் பேரிடரை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து தலைதூக்குவதையே காட்டுவதாக அனைத்துலக அணுசக்தி முகவை அமைப்பின் தலைமை இயக்குநரான ரஃபாயல் குரோசி சனிக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த அணுசக்தி ஆலையை கடந்த மார்ச் மாதம் ரஷ்யா ஆக்கிரமித்தது. என்றாலும் அதை உக்ரேனிய வீரர்களே இன்னமும் இயக்கி வருகிறார்கள். ஆலையில் இடம்பெறும் ராணுவச் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாதவை. எவ்வளவு விலை கொடுத்தாவது அந்தத் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றாரவர்.
இதனிடையே, அந்த ஆலையில் வெள்ளிக்கிழமை இரண்டு முறை ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்றும் ஆகையால், ரஷ்ய அணுசக்தி தொழில்துறை மீது தடை விதிக்க வேண்டும் என்றும் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரினார்.
அதேவேளையில், ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்தது. உக்ரேனேதாக்குதலுக்கு காரணம் என்று ரஷ்ய தரப்பு தெரிவித்தது.
இவ்வேளையில், அந்த ஆலையை மறுபடியும் கைப்பற்றுவதற்காக உக்ரேனிய தரப்புகள் தாக்குதலைக் கடுமையாக்கி வருவதால் அந்தப் பகுதியில் மோதல் மூர்க்கமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி அந்த ஆலையின் அணு சக்தி சாதனங்கள் சேதமடையவில்லை என்றும் கதிரியக்க ஆபத்து எதுவும் இல்லை என்றும் திரு குரோசி கூறினார்.
ஆனாலும் அந்தப் பகுதி பெருத்த சேதம் அடைந்து இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த இடத்திற்குச் சென்று அந்த ஆலையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று அனைத்துலக அணுசக்தி முகவை கடந்த நான்கு மாத காலமாக கோரி வருவதாகவும் ஆனால் அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்றும் குரோசி கவலை தெரிவித்தார்.
இதற்கு உக்ரேனும் ரஷ்யாவும் சம்மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.