நோய்ப்பரவலை முறியடித்து, சிங்கப்பூரை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்குத் தேவையான மிகுநம்பிக்கைக்கும் பிணைப்புக்கும் இந்தியச் சமூகம் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் மெச்சியுள்ளார்.
இந்தியச் சமூகம் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய்ப்பரவலைக் கடந்து, இப்போது வலிமையோடும் ஒற்றுமையோடும் திகழ்கிறது என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
தீபாவளியை முன்னிட்டு, மக்களிடத்தில் நம்பிக்கையை விதைக்கும் நோக்கில் மக்கள் செயல் கட்சியின் ‘நம்பிக்கை ஒளி’ இசைக் காணொளி வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வழக்கத்திற்கு மாறான நெருக்குதல்களாக இருந்த, இந்தியர்களுக்கு எதிரான இனவாத சம்பவங்களைத் தாண்டி, நாம் ஒன்றிணைந்து சிங்கப்பூரைக் கட்டிக்காத்ததாகவும் அவர் சொன்னார்.
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிய சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தையும் (சிண்டா), பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய இந்திய அமைப்புகளையும் சுட்டிக்காட்டி, அவற்றின் பங்களிப்பைப் பாராட்டினார் அமைச்சர்.
அதே வேளையில், இன்னுமொரு கொவிட்-19 அலையை எதிர்பார்ப்பதால் குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அனைவரும் சுயஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூர்க் கலைஞர்களான இயக்குநர் கே. ராஜகோபால், இசை அமைப்பாளரும் பாடகருமான சுஷ்மா சோமா, பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இந்த இசைக் காணொளியைப் படைத்துள்ளனர். நோய்ப்பரவலில் இருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பும் மக்களுக்குக் கடந்துவந்த பாதையை நினைவூட்டுகிறது இந்த இசைக் காணொளி.
‘சுடரே’ எனத் தொடங்கும் அப்பாடலை இயற்றிய ஜெயா ராதாகிருஷ்ணன், “சுடர் என்பது தீபாவளிக்கு ஏற்றும் தீப ஒளியை மட்டுமின்றி, நம் அனைவருக்குள்ளும் உள்ள நம்பிக்கை ஒளியையும் குறிக்கிறது,” என்றார்.
‘நம்பிக்கை ஒளி’ இசைக் காணொளியை யூடியூப் தளத்திலும் மக்கள் செயல் கட்சியின் சமூக ஊடகங்களிலும் காணலாம்.